சென்னை: அகில இந்திய ஆராய்ச்சி அறிஞர்கள் உச்சி மாநாடு (AIRSS) - 2025, சென்னை ஐஐடியில் மார்ச் 27-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள், கல்வியாளர்கள், தொழில்துறையினர், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை தொழில் முதலீடாக கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது. அத்துடன் பட்டதாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலும் தொழில்துறையுடன் இணைந்து இம்மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த உச்சி மாநாட்டில் ஆந்திர மாநில முதலமைச்சர் இன்று சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவர்கள் மத்தியில் அவர் பேசும்போது, "உங்களுடைய (மாணவர்கள்) உற்சாகத்தை பார்க்கும்போது இந்தியாவிற்கு மட்டுமல்ல; உலகத்திற்கே சிறந்த கண்டுபிடிப்புகளை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். உலகம் இந்தியாவை உற்று நோக்குகிறது. எதிர்காலம் நமக்கானது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
40 சதவீதம் ஆந்திரா மாணவர்கள்: இந்தியாவில் ஐஐடிக்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்து எழுந்தபோது, அதில் சென்னை ஐஐடியும் ஒன்றாக உருவாக்கப்பட்டது. இங்கு 25 முதல் 40 சதவீதம் மாணவர்கள் ஆந்திராவில் இருந்து வந்து படிக்கின்றனர்.
1962-1990 வரையிலான காலகட்டத்தில் சென்னை ஐஐடியில் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். இன்றைய நவீன உலகில் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கும் வகையில் சென்னை ஐஐடி மேம்பாடு அடைந்துள்ளது.பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகளாவிய அளவில் இந்திய மாணவர்கள் தலைசிறந்து விளங்குகிறார்கள்
பொதுவாகவே நாம் அறிவியல்பூர்வமாக மற்றும் கணிதவியல் ரீதியாக மிகவும் பலமானவர்கள். ஆங்கிலத்தின் மூலம் நாம் இன்னும் மேம்பட்டுள்ளோம். ஆந்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் வீட்டில் இருந்தே பணி செய்து, ஆண்டுக்கு ரூ. 30 முதல் 40 லட்சம் வரை சம்பாதித்து வருகின்றனர். நீங்கள் உலகத்தின் எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கே நம்மில் ஒருவர் இருப்பார். அவர்களிடம் தமிழ் அல்லது தெலுங்கு மொழியை கற்றுக் கொள்ளுங்கள்.

இளைஞர்கள் சக்தி: இ்ந்தியாவில் வேலைத்திறனுள்ள 18 முதல் 29 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 420 மில்லியன் பேர் உள்ளனர். இன்னும் 25 ஆண்டுகள் நாம் இளைஞர்கள் வழங்கும் நன்மைகளைப் பெறலாம். 2047க்குள் இந்தியர்கள் உலகின் முன்னணி சமூகமாக இருப்பார்கள்.
இந்தியர்கள் 80 முதல் 90 வயது வரைகூட தொடர்ந்து வேலை செய்வது நமக்கு மற்றொரு பெரிய நன்மை. நான் உங்களை (மாணவர்களை) உலகளாவிய தலைவர்களாக மாறச் சொல்கிறேன். நீங்கள் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி உங்கள் வாழ்நாளில் அதையொரு உலகளாவிய நிறுவனமாக மாற்றலாம்." என்று சந்திரபாபு நாயுடு பேசினார்.
மக்கள்தொகை மேலாண்மை: மேலும் பேசிய அவர், "சிங்கப்பூர் தற்போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியாக மாறிவிட்டது. ஆட்சி முதல் அந்தஸ்து வரை தமிழர்கள் ஆதிக்கம் அங்கே அதிகம். தமிழ்நாட்டில் தற்போது பிறப்பு விகிதம் என்பது 1.4, அதேபோல ஆந்திராவில் 1.5. ஆனால் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் பிறப்பு விகிதம் அதிகமாகும். தென்னிந்தியாவில் மக்கள்தொகை கட்டுப்பாடு முக்கிய பொருட்டாக பார்க்கப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள், 25 ஆண்டுகளுக்கு முன்பே குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தின. தற்போது இந்த மாநிலங்களில் பிறப்பு விகிதம் குறைந்துவிட்டது. ஆனால் பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் பிறப்பு விகிதமும் அங்கே அதிகமாக உள்ளது.
மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதும் நமக்கு ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மாறாக வட மாநிலங்களுக்கு இது சாதகமாக உள்ளது. எனவே தென்னிந்திய மாநிலங்கள் மக்கள்தொகை மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வட மாநிலங்களை சேர்ந்த அதிகமானோர் இங்கு (தென் மாநிலங்களுக்கு) வர நேரிடும். மக்கள்தொகை மேலாண்மையை நாம் சரியாக செய்தால், வரும் நாட்களில் இந்தியர்கள் உலகத்தை ஆள்வார்கள்." என்று சென்னை ஐஐடி மாணவர்கள் மத்தியில் சந்திரபாபு நாயுடு பேசினார்.
தெலுங்கில் பேசிய நாயுடு: சென்னை ஐஐடியில் நடந்த விழாவில் உரையாற்றிய பின் தெலுங்கில் பேச வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவிடம் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று அவர், "எந்தக் கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அதில் பாதி பேர் தெலுங்கு மாணவர்களாக இருக்கின்றனர். இதை நினைத்து இந்தியனாகவும், தெலுங்கனாகவும் பெருமைப்படுகிறேன்." என்று சந்திரபாபு நாயுடு தெலுங்கில் கூறினார்.