சென்னை: சென்னை அருகே இந்தோ - தைவான் தொழிற்பூங்கா அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் தொழிற்துறைக்கும் தைவான் வர்த்தக சபைக்கும் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னைக்கு அருகில் ரூ.10,000 கோடி முதலீட்டுடன், 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேகமான இந்தோ - தைவான் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று கூறினார்.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து எக்ஸ் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "சென்னை அருகே இந்தோ - தைவான் தொழிற்பூங்கா அமைப்பதற்காக வழிகாட்டும் தமிழ்நாடு - தைவான் வர்த்தக சபை ஆகியவற்றுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.1800 கோடி முதலீடு ஈர்க்கப்படுகிறது. இதன் மூலம் 5000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும்.
இதையும் படிங்க: வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் சிறை! சட்டப் பேரவையில் மசோதா தாக்கல்!
Flash News ✨
— Dr. T R B Rajaa (@TRBRajaa) April 26, 2025
An MoU was signed today, between @Guidance_TN and the #Taiwan Chamber of Commerce to set up an Indo-Taiwan Industrial Park near Chennai, one of many such clusters which we will create in Tamil Nadu.
This park alone has the potential to attract investments worth… pic.twitter.com/48RvDrpEBw
தமிழ்நாட்டின் நேரடி அந்நிய முதலீட்டில் மின்னணு பொருட்கள், காலணிகள் தயாரிப்பில் ஒரு வலுவான தூணாக தைவான் முதலீடுகள் திகழ்ந்து வருகின்றன. எனவே தைவான் நாட்டைச் சேர்ந்த முகமைகள், தொழிற் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தயாரிப்பில் ஈடுபடுவதற்கான தனிப்பட்ட தளம் அமைக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. எனவே தான் சர்வதேச தரத்தில் தனிப்பட்ட இந்தோ - தைவான் தொழிற் பூங்காங்களை நாம் முன்னெடுக்கின்றோம்.
ஆட்சி நிர்வாகத்தில் விரைவான முடிவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்கிறார். எனவே, அவருக்கு இணையாக தொழிற்துறை பணியாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டேன். இன்று அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் அதற்கான பணி தொடங்கி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இந்த அரசு விரைவாக பணியாற்றுவது என்பதில் கடமைப்பட்டிருக்கிறது.
தைவான் முதலீடுகள் மூலம் ரூ.10,000 கோடி முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு அரசின் இலக்காகும். இதன் மூலம் மின்னணு உதிரி பாகங்கள், தொழில்நுட்பம், ஜவுளித்துறை, காலணி உதிரிபாகங்கள் ஆகிய தைவான் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதன் மூலம் 20,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்,"என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போது இந்தோ- தைவான் வர்த்தக சபையின் துணைத் தலைவர் சிமோன் லீ, சென்னை தைவான் வர்த்தக சபை தலைவர் எரிக் சாங்க் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்