சென்னை: சென்னை சூளையில் உள்ள அகண்ட தண்டு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் பட்டாளத்தில் உள்ள 40 ஆண்டுகள் பழமையான சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு இன்று (ஜூன்.8) நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், '' திமுக ஆட்சி அமைந்து 3000-க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி அமைந்து இதுவரை 117 முருகன் கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. இதுவரை 7,683 கோடி ரூபாய் மதிப்பில் 7,597.77 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்சி அமைந்து மொத்தம் 6,306 கோடி ரூபாய் மதிப்பில் 26,300 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இவ்வளவு பணிகள் மேற்கொள்ளப்படுவது திராவிடம் மாடல் ஆட்சியில் தான். ஒன்றியத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான்'' என்றார்.
அமித் ஷா வருகை திமுகவிற்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என பாஜக தலைவர் கூறிய கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர், '' பதற்றமோ, பயமோ திமுக ஆட்சிக்கு இல்லை. திமுக கூட்டணி வலுவாக, தெளிவாக உள்ளது. பதற்றம் பாஜகவிடம் இருப்பதால் தான் அவ்வப்பொழுது முக்கிய புள்ளிகள் தமிழ்நாட்டுக்கு வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரை பார்த்து தான் ஒன்றியமே இன்று பதற்றத்தில் உள்ளது என்பதற்கு அமித் ஷாவின் வருகையே ஒரு எடுத்துக்காட்டு'' என்று கூறினார்.
இதையும் படிங்க: மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம்: உறுதி அளிக்க அமித் ஷா தயாரா? - தயாநிதி மாறன் கேள்வி!
தொடர்ந்து பேசிய அவர், '' இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் முருகர் மாநாடு தான் பக்தி மாநாடு. அவர்கள் நடத்தக்கூடியது அரசியல் கட்சி சார்பில் நடத்தப்படும் முருகன் மாநாடு. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குட முழுக்கை செய்வது என்பது சற்று சவாலான பணி. ஏனென்றால், ராஜகோபுரம் சற்று விரிசல் ஏற்பட்டு இருக்கக்கூடிய நிலையில் உள்ளது. அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கிளாம்பாக்கம் சர்ச்சை
திறனற்ற ஆட்சிக்கு ஒரு திட்டத்தை சாட்சியாக வைக்க வேண்டுமென்றால் கடந்த கால எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருந்த ஆட்சிக்கு கிளாம்பாக்கம் தான் ஒரு சாட்சி. திட்டமிடல் இல்லாததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வடிவமைத்ததன் காரணமாக அதிமுக ஆட்சிக் காலத்தில் செப்பனிட முடியவில்லை. கிளாம்பாக்கத்தில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற வடிகாலை கூட அதிமுக ஆட்சியில் அமைக்கவில்லை.
முடங்கிக் கிடந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் நம்முடைய முதலமைச்சர். சில தினங்களுக்கு முன்பு பயணிகள் அதிக அளவில் குவிந்ததால், தேவையான பேருந்துகளை ஏற்பாடு செய்து பயணிகளின் திட்டமிட்ட பயணத்தை நிறைவேற்றியுள்ளோம். திமுக ஆட்சியில் எந்த விதமான தவறில்லை என்பதால் போக்குவரத்து துறை சார்பிலும் அரசின் சார்பிலும் விரிவாக விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. தேவையான அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்குள்ளாக அனைத்தையும் சரி செய்து பயணிகளின் பயணத்தை இனிதாக்கிய அரசு எங்களுடைய அரசு. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கத்தான் செய்வார்கள்'' என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.