திருப்பத்தூர்: ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் ஆம்பூர் நகைக் கடை பஜாரில் நகைக் கடை நடத்தி வரும் நிலையில், மார்ச் 26ஆம் தேதி இரவு நகைக் கடையைப் பூட்டி விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, சோலூர் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதை அருகே இருட்டில் மறைந்திருந்த நபர்கள் அருண்குமாரைக் கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், ஆம்பூர் காவல்துறையினருக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த ரத்த வெள்ளத்தில் கிடந்த அருண்குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது அருண்குமாரை வெட்டியது தொடர்பாக அவரது தாய்மாமாவான விஜயகுமார் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அருண்குமார் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு விஜயகுமாரின் பூர்வீக சொத்தை எழுதி வாங்கியுள்ளார். அதனால், அருண்குமாருக்கும், விஜயகுமாருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் இதுகுறித்து விஜயகுமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனக்கும் அருண்குமாரும் முன்விரோதம் இருந்தது. மேலும் அருண்குமார், எனது குடும்பத்தினருக்குச் செய்வினை வைத்துள்ளார். அதனால், அவருக்குச் செய்வினை வைக்க நானும், எனது மகன் வெங்கடேசனும் சாமியாரிடம் சென்றோம். அப்போது சாமியார், அடுத்த அமாவாசைக்குள் அருண்குமாரைக் கொலை செய்யாவிட்டால், அவர் உங்களைக் கொலை செய்து விடுவார் எனக் கூறினார்.
அதனால், கூலிப்படை மூலம் அருண்குமாரை கொலை செய்யதிட்டமிட்டப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 26ஆம் தேதி இரவு அருண்குமார் நகைக் கடையைப் பூட்டிவிட்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது சோலூர் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையின் அருகே அருண்குமாரை கூலிப்படையாயினர் கத்தியால் வெட்டினர் எனத் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் அருண்குமாரின் தாய் மாமாவான விஜயகுமார் மற்றும் அவரது மகன் வெங்கடேசன், மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த முகமது அலி, திருப்பதி, ஆகாஷ், பார்த்திபன், சந்துரு, ஜெகன், ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி: மதுபோதையில் மண்வெட்டியால் பெட்ரோல் பங்க் ஊழியர்களை சரமாரியாக தாக்கிய கும்பல்! |
மேலும் அவர்கள் கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைதான முகமது அலிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பூர்வீக சொத்து தகராறில், தங்கச்சி மகனைச் சொந்த தாய்மாமாவே மூடநம்பிக்கையால், கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.