சென்னை: நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா பகுதிகளுக்கு கோடை விடுமுறையில் அதிகமானோர் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் நேரிட்டது. எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சுற்றுலா தலங்களுக்குச் செல்ல இ பாஸ் முறையை கட்டாயமாக அமல்படுத்தும் படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி ஊட்டிக்கு வார நாட்களில் தினமும் 6,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் தினமும் 8,000 வாகனங்களும், கொடைக்கானலுக்கு வார நாட்களில் தினமும் 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் தினமும் 6,000 வாகனங்களும் மட்டுமே அனுமதிக்க இ பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானலில் நடைபெற உள்ள கோடை விழாக்கள், மலர் கண்காட்சிகள் போன்ற நிகழ்வுகளில் அதிக அளவு மக்கள் வருவார்கள் என்பதால் கூடுதலாக இ பாஸ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஊட்டி, கொடைக்கானலில் அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகளுக்கு 'சீல்'! நீதிமன்றம் அதிரடி!
இந்த மனு நீதிபதிகள் என் சதீஷ்குமார், டி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "ஊட்டிக்கு வார நாட்களில் 7000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் ஒன்பதாயிரம் வாகனங்களும் வருகின்றன,"என தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்ற விசாரணையில் காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்த மாவட்ட கூடுதல் ஆட்சியர், "கோடை காலத்தில் ஊட்டியில் மலர், பழம், ரோஜா உள்ளிட்ட கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளதால் கூடுதல் வாகனங்கள் வருவதற்கு இ பாஸ் முறையில் அனுமதி வழங்க வேண்டும்,"என்று கேட்டுக் கொண்டார்.
தமிழக அரசின் அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கோடை கால விழாக்களின் போது கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்ற அவசியம் வரும் பட்சத்தில் மேலும் 500 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர். இதே போல கொடைக்கானலுக்கு கூடுதலாக 300 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு அனுமதி அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்