சென்னை: ஆலந்தூர் அருகே ஐடி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்ததாக அசாம் இளைஞரை ஆலந்தூர் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரிடமிருந்து ஒன்றரை லட்சம் மதிப்புடைய 13 கிராம் ஹெராயின் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை ஆலந்தூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கட்டிட தொழிலலாளர்களை குறிவைத்து ஹெராயின் (Heroin) போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக, புனித தோமையார் மலை (St. Thomas Mount) காவல் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் துணை ஆணையர் சீனிவாசன் உத்தரவின் பேரில், ஆலந்தூர் காவல் ஆய்வாளர் பாலன் தலைமையிலான தனிப்படையினர், ரயில் நிலையங்கள், கல்லூரி அருகில் உள்ளிட்ட பகுதிகளில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே நேற்று சந்தேகத்திற்கு இடமாக நின்றுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார் அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அப்போது அதில் ஹெராயன் வகை போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை மீனம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இளைஞர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் (25) என்பது தெரியவந்தது. மேலும், இவர் அசாமில் இருந்து ரயில் மூலம் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருளை சென்னைக்கு கடத்தி வருவதும், அதனை ஆலந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கட்டிட தொழிலாளர்கள், ஐடி ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்தததும் தெரியவந்தது.
இதனையடுத்து, நிஜாமுதீனிடமிருந்து சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புடைய 13 கிராம் ஹெராயின் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்