ஈரோடு: கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில், பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய அமைச்சர் பொன்முடியைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பவானி சாகர் சட்டமன்ற உறுப்பினர் பன்னாரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா கலந்து கொண்டு அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “இந்திய ஒருமைப்பாட்டுக்குத் தீங்கு விளைவிக்க மாட்டேன் என்று உறுதிமொழி அளித்த ஒரு அமைச்சர் பெண்களை இழிவுபடுத்திப் பேசலாமா? பொன்முடி மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இதுபோன்று பேசியுள்ளார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது போன்றவர்களை மக்கள் சட்டமன்றத் தேர்தலில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.
இதற்கு முன்னரே, பெண்கள் ஓசி பயணம் செல்கின்றனர் என்று பேசியுள்ளார். மக்கள் வரிப் பணத்தில் கொண்டு வந்த திட்டம் ஓசி என்று சொல்ல முடியுமா? இவ்வாறு கொச்சையாகப் பேசுவதற்கு அவருக்குத் தகுதி இல்லை. அவருக்கு அமைச்சராக இருப்பதற்கே தகுதி இல்லை.
இப்போது, திமுக அரசு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கிவிட்டது. இதுவரை திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யப்படவில்லை. அதனை மக்கள் சிந்தித்து இந்த தேர்தலில் செயல்பட வேண்டும். பெண்கள் மீது மரியாதை இல்லாமல், இழிவாகப் பேசிய அமைச்சர் பொன்முடி மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? எனப் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: தேர்வுகளை சரியான நேரத்தில் நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும் - அமைச்சர் கோ.வி.செழியன் |
100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. ஆனால், இதுபோன்ற சூழல் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட போது மூன்று மாதத்திற்கான தொகையை அரசை வழங்கியது. அதற்குப் பிறகு மத்திய அரசு வழங்கிய நிதியை அரசு நிதியில் சேர்க்கப்பட்டது. இவ்வாறு வரலாறு இருக்கையில் திமுக தயங்குவது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.