கோயம்புத்தூர்: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இங்கு பணியாற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் கூலிக்கு நெசவு செய்பவர்கள் ஆவார்கள். இவர்களை நம்பி பல லட்சம் குடும்பங்கள் உள்ளன.
இந்த நிலையில் மூன்று முறை உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது வழங்கப்படும் கூலி மிக மிக குறைவு என்றும், தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 15000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டதால், நாளொன்றுக்கு ரூ.60 கோடி வீதம், இதுவரை ரூ.1000 கோடிக்கு மேல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விசைத் தறி தொழிலாளர்கள் 29 நாட்களாக நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சோமனூரில் 28 நாட்களை எட்டிய இந்த போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக விசைத்தறி தொழிலாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 18) அதிமுக எம்.எல்.ஏக்கள் வி.பி.கந்தசாமி மற்றும் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் சோமனூரில் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வரும் பந்தலுக்கு நேரில் சென்று தொழிலாளர்களை சந்தித்தனர். இதன் பிறகு வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறும்போது, “அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
இல்லாவிட்டால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ கூறினார். இதற்கிடையே விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் அரசு உடனடி தீர்வு காணாவிட்டால் போராட்டம் மேலும் தீவிரமாகும் என விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ''டிவியை ஆன் செய்தும் ஐபிஎல் வரலையே...'' - நீதிமன்ற படியேறிய பூ வியாபாரிக்கு இரு மடங்கு லாபம்!
சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இவ்விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் அரசு தரப்பில் உரிய பதில் அளிக்கப்படாததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்