சென்னை: நீட் தேர்வு விலக்கு தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சமூகநீதிக்கும், மாணவர்களுக்கும், மக்களுக்கும் எதிரான பா.ஜ.க.வினர் பங்கேற்கவில்லை என்றதும், அவர்களின் வழியில் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினரும் புறக்கணித்து தங்கள் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தினர் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சித் தொண்டர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். 'மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி' என்ற தலைப்பிலான அந்தக் கடிதத்தில்,'சட்டப் போராட்டத்தின் வழியே திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைமையிலான அரசும் பெற்றுத் தருகின்ற தீர்ப்புகள் தமிழ்நாட்டின் நலனுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கும் வெளிச்சம் பாய்ச்சக்கூடியவையாக இருக்கும் என்பதுதான் வரலாறு. ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை ரத்து செய்து, மாநில உரிமைகளைக் காத்திடும் மகத்தான தீர்ப்பினை, திராவிட மாடல் அரசு முன்னெடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கி இருப்பது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படக்கூடிய Red Letter Day ஆகும்.
இந்திய நாடாளுமன்றம் என்பது அனைத்து மாநிலங்களின் தொகுப்புணர்வு என்பதை 1962-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் தன்னுடைய முதல் பேச்சிலேயே உணர வைத்தவர் நம் திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அவருடைய குரலுக்குப் பிறகுதான், மாநில உரிமைகள் சார்ந்த குரல்களின் எண்ணிக்கை உயர்ந்தது.
இந்திய அரசியல் சட்டத்தின் நெறிமுறைகளின்படி மாநிலங்கள் தனக்கான சட்டங்களை இயற்றி, தற்சார்பாகச் செயல்படும் அதிகாரம் கொண்டவை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் 1974-ஆம் ஆண்டு மாநில சுயாட்சித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் முத்தமிழறிஞர் கலைஞர். பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் கட்டிக்காத்த மாநில உரிமைகளுக்கு ஆபத்து நேரும்போது, தி.மு.க.வின் தலைவர் என்ற பொறுப்பிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பிலும் உள்ள உங்களில் ஒருவனான நான் மாநில உரிமை காக்கும் சட்டப்போரில் சளைக்காமல் முதன்மையாக நிற்பேன்.
இதையும் படிங்க:உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு! 'நீட் தேர்வு விலக்கு' அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
மும்மொழித் திட்டத்தை தேசிய கல்விக் கொள்கையின் வழியே ஒன்றிய பா.ஜ.க அரசு திணிக்க முயற்சிப்பதை எதிர்த்து நின்று, இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கத்திற்கு இடமில்லை என்பதில் உறுதியாக நின்று, ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க மறுத்தாலும் எங்கள் மாநில நலனைக் காக்கும் வகையில், மாநில அரசின் நிதியிலிருந்தே கல்விச் செலவுகளை எதிர்கொள்ளும் வலிமை எங்களுக்கு உண்டு என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறோம்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்தியாவின் முன்னேற்றத்திற்கான மனிதவள ஆற்றலாகத் தமிழ்நாட்டின் கட்டமைப்பை உருவாக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் மறுசீரமைப்பில் நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க அரசு திட்டமிடுகிறது என்றதுமே, தமிழ்நாட்டைப் போல பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, நாடாளுமன்ற மக்களவையில் தற்போதுள்ள வகையிலேயே மாநிலங்களுக்கான விகிதாச்சாரம் தொடர வேண்டும் என்பதையும், மறுசீரமைப்புத் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் முதல் குரல் கொடுத்திருப்பதும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன் கை எடுத்திருப்பதும் உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.
நியாயமும் வலிமையும் கொண்ட குரல் எல்லாத் திசைகளிலும் எதிரொலிக்கும். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நமது திராவிட முன்னேற்றக் கழக மக்களவை -மாநிலங்களவை உறுப்பினர்களின் குரல் ஓங்கி ஒலித்தது. தோழமைக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து நியாயத்தை எடுத்துரைத்தது. ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதையும், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்காமல் வஞ்சிப்பதையும், 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கினை வழங்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியதுடன் மணிப்பூர் கலவரம், வக்ஃப் திருத்தச் சட்ட மசோதா, பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை என இந்திய ஒன்றியத்தின் அமைதிக்கும் வளர்ச்சிக்குமான குரலாக கழகத்தினரின் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தது.
சட்டமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் நலன்களையும் உள்ளடக்கியதாகவும் பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை மேம்பாட்டை மையப்படுத்தியும் அமைந்துள்ளன. 2024-25-ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு 9.69% என்ற அளவில் உயர்ந்து நிற்பதும், பரவலாக்கப்பட்ட வளர்ச்சியின் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் ஏற்றம் பெற்று, பெண்கள் பங்கேற்புடனான வேலைவாய்ப்புகள் பெருகியிருப்பதும் ஒன்றிய அரசின் புள்ளிவிவரத்தின் மூலமாகவே வெளிப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சியை அடைவதற்கும் தொடர்வதற்கும்தான் மாநில உரிமைகளுக்கான நமது போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு மைல்கல்லாக ஏப்ரல் 8-ஆம் நாள் வெளியான மகத்தான தீர்ப்பு அமைந்துள்ளது.
தீர்ப்பு வெளியான நாளில், கூட்டத்தொடர் நிறைவடைந்ததும், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதாடி, வெற்றித் தீர்ப்பு கிடைத்திட காரணமாக இருந்த முகுல் ரோஹத்கி, ராகேஷ் திரிவேதி, அபிஷேக் மனு சிங்வி ஆகிய மூத்த வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்டு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன். இந்த வழக்கின் வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் - மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்கள் நேரில் சந்தித்து என்னிடம் தீர்ப்பின் விவரங்களைத் தெரிவித்தபோது, தலைவர் கலைஞர் சொன்னது போல ‘வின்’சன்னாக வில்சன் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவரைப் பாராட்டி மகிழ்ந்தேன்.
இதையும் படிங்க: "அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒரு நாடகம்" - தவெக விஜய் விமர்சனம்!
தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அத்துமீறல்களைத் தகர்த்தெறிந்த வெற்றித் தீர்ப்பு வெளியான வேகத்தில், தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 9-ஆம் நாள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
சமூகநீதியிலும் மாணவர்களின் நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர். சமூகநீதிக்கும் ,மாணவர்களுக்கும், மக்களுக்கும் எதிரான பா.ஜ.க.வினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும், அவர்களின் வழியில் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினரும் புறக்கணித்து தங்கள் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.
மாநில உரிமையை காக்கும் போராட்டத்தின் முன்னோடியான தி.மு.கழகம், நீட் தேர்விலும் விலக்கு பெறும் வகையில் தமிழ்நாட்டின் தனித்தன்மையை சட்டப் போராட்டத்தின் வழியே முன்னெடுக்கத் தீர்மானித்து, ஆதரவு சக்திகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை தெளிவாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு தொடக்கம். நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் இது தொடரும். மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்று நம் தலைவர் கலைஞர் மொழிந்த முழக்கத்தை முன்வைத்து நீதியின் வாயிலாக இந்தியாவின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் காத்திடும் பேரியக்கமாக தி.மு.க தன் போராட்டத்தைத் தொடரும்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!' திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.