கோயம்புத்தூர்: கோவை செஞ்சிலுவை சங்க அலுவலகம் முன்பு கோவை மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் திமுக அரசை கண்டித்தும் அமைச்சர் பொன்முடியை பதவி விலகக் கோரியும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் நடிகை விந்தியா, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆட்சி காலங்களில் பெண்களின் முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் மகளிர் காவல் நிலையம் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் அமைக்கப்பட்டது.
இன்றைக்கு திமுக ஆட்சியில் கல்லூரி மாணவிகள் முதல் முதியோர் வரை யாரும் பாதுகாப்பாக இல்லை. பாலியல் தொல்லையால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் சாபம் பொல்லாதது. திமுக ஆட்சி இன்னும் பத்து மாதம் தான். விடியல் தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த இவர்கள் என்ன சாதனை செய்தார்கள்? திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தவித நலத்திட்டங்களும் மேற்கொள்ளவில்லை. வேதனை தான் மிஞ்சுகிறது.
இதையும் படிங்க: யுபிஎஸ்சி தேர்வில் வென்றவர்கள் ஆளுநருடன் சந்திப்பு - ஆர்.என்.ரவி கூறிய முக்கிய அறிவுரை!
பெண்களுக்கு எதிரான ஆட்சியாக திமுக அரசு உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 20 ஆயிரம் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. இது போன்ற வழக்குகளில் திமுகவினர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு பாதுகாப்பு இல்லை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று கேள்வி எழுப்பி உள்ளார். திமுக ஆட்சி காலத்தில் இந்திரா காந்தி முதல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வரை பெண்களை அவமதிப்பு தான் செய்யப்படுகின்றனர்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் திமுகவினரை கண்ட்ரோலாக வைத்திருக்க முடியவில்லை. அவுட் ஆப் கண்ட்ரோல் ஆகிவிட்டது. அமைச்சர்கள் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசுகின்றனர். ஆட்சியின் மீதான அதிருப்தியை இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று திசை திருப்புகிறார்கள். இந்தியை ஒழிப்போம் என்பவர்கள் சாராயத்தை ஒழிப்போம் என்று கூற வேண்டியது தானே.
ஆயிரம் ரூபாய் உதவி தொகை கொடுத்து விட்டு, நீங்கள் அந்தப் பணத்தில் மேக்கப் போடலாம் என ஒரு அமைச்சர் விமர்சனம் செய்கிறார். மற்ற அமைச்சர்களை விடவும் பொன்முடி பெண்களை அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார். பெண்கள் ஓசி டிக்கெட்டில் பயணிப்பவர்கள் என்று கூறியிருக்கிறார். இப்போது சைவம், வைணவம் குறித்து பொன்முடி கேவலமாக பேசி உள்ளார். அதை காமெடி என நினைத்து கை கொட்டி சிரிக்கிறார்கள்,"என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.