சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வடபழனியை சேர்ந்த மணி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "நான் வடபழனியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்துள்ளேன். 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க சென்ற போது, வாக்காளர் பட்டியலில் இருந்து என பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. எனது பெயர் நீக்கப்பட்டிருப்பதன் மூலம் நான் வாக்களிப்பதற்கான ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
இதே போல, தியாகராய நகர் தொகுதியில் மட்டும் சுமார் 5 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது. எனது பெயர் ஏன் நீக்கப்பட்டது? என கோடம்பாக்கம் மாநகராட்சி அலுவலக அதிகாரி ராஜலட்சுமியிடம் விசாரித்த போது, நான் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் பெயர் நீக்கப்பட்டதாக பதில் அளித்தார். மேலும், அங்கிருந்த அதிகாரி துரைராஜ், நான் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் என் பெயரை பிரசாந்த் என்பவர் நீக்க சொன்னார். அதன்படி நீக்கினோம் என்று கூறினார். எனவே, என் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய அதிகாரிகள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்த போது, மணியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அப்போது மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: 'போதையில் பறந்து வந்த பிரபல நடிகரின் கார்' - பெண் உள்பட 3 பேர் படுகாயம்; சிக்கிய ஓட்டுநர்!
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், "வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணிக்காக, தனியார் நிறுவனத்தின் மூலம் சிலர் தற்காலிக பணியில் அமர்த்தப்பட்டனர். தற்காலிக பணியாளர்களான ராஜலட்சுமி, பிரசாத் ஆகியோர் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தவறு செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், உதவி தேர்தல் அதிகாரி துரைராஜ், வாக்குசாவடி அதிகாரி மஞ்சுளா ஆகியோருக்கு வாக்காளர் பெயர் நீக்கம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் மஞ்சுளா பதில் அளித்து விட்டார். துரைராஜூம் விரைவில் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கின்றோம். அவர்களின் விளக்கத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,"என்று கூறப்பட்டுள்ளது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அதிகாரிகள் தவறு செய்து இருந்தால் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக் வேண்டும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்