சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள டைடல் பார்க் சிக்னல் அருகே இன்று மாலை சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் காயம் அடைந்தனர்.
சென்னை அடையாறு பகுதியில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் ராஜிவ் காந்தி சாலையில் டைடல் பார்க் அருகே இன்று மாலை எப்போதும் போல வாகனங்கள் சாலையில் விரைந்து கொண்டிருந்தன.இந்த சாலையில் சோழிங்க நல்லூரில் இருந்து சென்ட்ரல் நோக்கி மரியதாஸ் (47) என்ற ஓட்டுநர் காரில் ஒரு குடும்பத்தினரை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். டைடல் பார்க் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அவரது கார் ஏதோ பள்ளத்தில் சிக்கியது போல உணர்ந்தார்.
தெரியாமல் பள்ளத்தில் கார் பாய்ந்து விட்டதோ என பதறிய நிலையில், சிறிது நேரம் கழித்துத்தான் சாலையின் நடுவே நேரிட்ட பள்ளத்தில் கார் விழுந்திருப்பதை ஓட்டுநர் உணர்ந்தார். அதற்குள் சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. வாகனங்களில் சென்று கொண்டிருந்தோர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை பார்க்க ஆர்வத்துடன் குவிந்தனர். ஆங்கிலப்படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சி போல சாலையின் நடுவே திடீரென பள்ளம் நேரிட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அவர்களை போக்குவரத்து போலீசார் தள்ளி நிற்கும்படி அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: கரூர் அருகே பயங்கர விபத்து - 5 பேர் உயிரிழப்பு; 19க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
இதனைத் தொடர்ந்து கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இருந்த கார் 20 நிமிடம் கழித்து மீட்கப்பட்டது. ஓட்டுநர் மரியதாஸ், காரில் பயணித்த விக்னேஷ் (42), அவரது மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் சிறிய காயத்துடன் மீட்கப்பட்டனர். உடனே அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
பள்ளம் நேரிட்ட இடத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், அதன் காரணமாக பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலயில் இது குறித்து விளக்கம் அளித்த மெட்ரோ ரயில் நிர்வாகம், "மெட்ரோ ரயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்படவில்லை. மெட்ரோ பணி நடைப்பெறும் இடத்துக்கும் சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடத்துக்கும் 300 மீட்டர் இடைவெளி உள்ளது. சாலையின் கீழே செல்லும் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே பள்ளம் ஏற்பட்டுள்ளது,"எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நடந்த விபத்து
சென்னையில் எப்போதும் போக்குவரத்து நெரிசலோடு காணப்படும் அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி மதியம்இதே போல ஒருசாலையின் நடுவே திடீரென ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து, ஒரு கார் ஆகியவை இந்த பள்ளத்தில் சிக்கின. பேருந்தில் இருந்த பத்துக்கும் மேற்பட்டோர் லேசான காயமுற்றனர். காரில் இருந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அப்போதும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வந்தன.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.