சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டனர். அப்போது கூட்டத்தை பயன்படுத்தி செல்போன் திருடர்கள் கிரிக்கெட் பார்வையாளர்கள் கவனத்தை திசை திருப்பி செல்போன்களை திருடி சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இது குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் தனிப்படை ஒன்று அமைத்து செல்போன் திருடர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஏஐ தொழில்நுட்பம் (AI) மூலம் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த நான்கு சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடமிருந்து சுமார் 38 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் யுவராஜ் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் கூறியதாவது;

''கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற சிஎஸ்கே-ஆர்சிபி போட்டியின் போது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் மைதானத்திற்கு வெளியே பார்வையாளர்களிடமிருந்து செல்போன்கள் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்கள் அனைத்தும் சென்னை பெருநகர் காவல் துறையால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் செயல்படும் 'சென்னை சிங்கம் ஐபிஎல்' செயலி மூலம் பெறப்பட்டது.
ஏஐ உதவியுடன் கைது
இதையடுத்து புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கினை உரிய விசாரணை செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் துறையால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI Technology) உதவியுடன் செல்போன் திருடு போன இடங்களை கண்டறிந்து சந்தேக நபர்கள் பற்றிய அடையாளங்கள் கண்டறிந்து அவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் அந்த நபர்கள் செல்போன் திருடிய பின்பு சென்னை கோயம்பேட்டில் இருந்து பேருந்து மூலம் வேலூர் சென்று விடுதி ஒன்றில் தங்கி இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து வேலூர் விரைந்த தனிப்படை போலீசார் விடுதியில் பதுங்கி இருந்த 8 நபர்களை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களை சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது.
மாஸ்டர் பிளான்
விசாரணையில் ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் (22), ஆகாஷ் நோநியா (23), விஷால் குமார் மாட்டோ (22), கோபிந்த் குமார் (21) என்பதும் மற்ற நான்கு நபர்கள் சிறார்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும் இந்த கும்பல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை கள்ள சந்தையில் வாங்கி மைதானத்திற்குள் நுழைந்து ரசிகர்கள் அதிக அளவில் இருக்கும் இடங்களிலும், உணவு கூடங்களிலும் புகுந்து செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் 4 சிறார்களை இவர்கள் செல்போன் திருட பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. இதற்கென இவர்களுக்கு அவர்களின் சொந்த மாநிலங்களில் பயிற்சி கொடுத்து தமிழ்நாடு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இதேபோன்று கடந்த 22 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரசிகர்களிடம் செல்போன் திருடியதும் விசாரணையில் அம்பலமானது.
கூட்டத்தில் திருட பயிற்சி
மேலும் இந்த கும்பலின் தலைவன் ராஜ்குமார் கடந்தாண்டு சென்னையில் ஐபிஎல் போட்டியின் போது செல்போன் திருடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அதன் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தவர். மற்றவர்களுக்கும் பயிற்சி கொடுத்து தற்போது மீண்டும் அதே பாணியில் கிரிக்கெட் மைதானங்களில் செல்போன் திருடும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட 8 பேரிடம் இருந்து சுமார் 38 செல்போன்கள் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 4 பேரை சிறையில் அடைத்துள்ளோம். நான்கு சிறுவர்களை சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளோம். பின்னர் பாதிக்கப்பட்ட நபர்களிடம் அவர்களின் செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், இந்த நபர்களை போலீஸ் காலில் எடுத்து விசாரணை செய்ய மேல் அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த உடன் இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டு உள்ளோம்'' என காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் யுவராஜ் நம்மிடம் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்