சென்னை: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், அங்கு என்ன நடந்தது? தங்களின் மனநிலை என்னவாக இருந்தது? என்பது பற்றிய திகில் அனுபவத்தை தமிழ்நாடு திரும்பிய சுற்றுலா பயணிகள் பகிர்ந்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பெஹல்காமில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில், நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு ஆட்டோ மொபைல்ஸ் அசோசியேசன் சார்பில் 70 பேர் காஷ்மீருக்குக் கடந்த 19-ம் தேதி சுற்றுலா மேற்கொண்ட நிலையில், 3 மணி நேரம் தாமதம் காரணமாக, அவர்கள் பயங்கரவாத தாக்குதலில் சிக்காமல் உயிர் தப்பியனர். அவர்களைத் தமிழ்நாடு அரசு பாதுகாப்பாக சொந்த ஊர் வரவழைத்துள்ளது.
இதில் முதற்கட்டமாக, மதுரையை சேர்ந்த 14 பேர், சென்னையை சேர்ந்த 5 பேர் என 19 பேர், தமிழக அரசின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு, ஹைதராபாத் வழியாக விமானம் மூலம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு அவர்களை அரசு அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம் மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.
சுற்றுலாப் பயணிகளுள் ஒருவரான மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நர்சிங் சூப்பரண்டாக பணியாற்றும் ஆனந்தி கூறுகையில், “ ஜம்மு காஷ்மீருக்குச் சுற்றுலா சென்ற முதல் இரண்டு நாட்கள், அமைதியாகவும் ரம்மியமாகவும் இருந்தது. குளுமையான சூழ்நிலையில் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். திடீரென தாக்குதல் சம்பவம் நடந்து அனைத்தையும் தலைகீழாக மாற்றி விட்டது.
அதையடுத்து, அழகாகத் தெரிந்த ஜம்மு காஷ்மீர் பயத்தை ஏற்படுத்தியது. மக்கள் எப்படி அந்த பதற்றமான சூழலில் வாழ்கிறார்கள்? எனத் தெரியவில்லை. அங்கு மக்கள் அனைவரும் நன்றாக பழகினர். அனைவருக்கும் உதவி செய்தனர். தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் முழுக்க ஆங்காங்கே ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியிலிருந்தனர். தலைக்கு மேல் திடீரென ஹெலிகாப்டர்கள் வட்டமடித்தபடி பாதுகாப்புப் பணியில் களமிறங்கின. இந்த சூழல் எனக்குள் மிகுந்த பயத்தைக் கொடுத்தது” என்றார்.
இதையும் படிங்க: "அப்பாவி மக்களை ஏன் கொல்கிறீர்கள்?" கேள்வி கேட்ட இளைஞரையும் வஞ்சம் தீர்த்த பயங்கரவாதிகள்! |
இந்த நிகழ்வு குறித்துப் பேசிய ஆனந்தன், “எங்களுடைய சுற்றுலா நேர அட்டவணைப்படி பார்த்தால் தாக்குதல் நடந்த நேரம் மதியம் 3 மணிக்கு, 'மினி சுவிட்சர்லாந்து' என்றிழைக்கப்படும் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு முன்பு சுற்றிப் பார்த்த இடங்களில் நாங்கள் அதிக நேரம் செலவிட்டதால் அங்கு செல்ல தாமதம் ஏற்பட்டது.
அதன் காரணமாக, இந்த சம்பவத்தில் உயிர் தப்பி உள்ளோம். இல்லையென்றால், என்ன நடந்திருக்கும்? என நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மதுரை மீனாட்சி தான் எங்களைக் காப்பாற்றி உள்ளார் என நினைக்கிறேன். தமிழ்நாடு அரசுக்கு நன்றி” என்றார்.
இரண்டாம் கட்ட மீட்பு பணியில்: இதே போல், இரண்டாம் கட்டமாக 68 பேரை தமிழ்நாடு அரசு மீட்டு விமான மூலம் சென்னை அழைத்து வந்தது. அவர்களை தமிழர் நலத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் வரவேற்று சொந்த ஊருக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.
அப்போது, பேசிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் வள்ளலார், "ஜம்மு - காஷ்மீர் தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் வந்த உடனே, அந்த பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த மக்களை மீட்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து, முதல் கட்டமாக 50 பேர் மீட்கப்பட்ட நிலையில் தற்போது மதுரை, திருச்சி, வேலூர், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 68 பேர் சென்னை திரும்பியுள்ளனர்.
இவர்கள் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த சம்பவம் குறித்து அறிந்துவுடனே பயணிகளுள் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். மொத்தம் 140 நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்." என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.