டெல்லி: ஐபிஎல் 2025 சீசனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது ஆர்சிபி அணி. இந்த வெற்றியின் மூலம், புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி முதலிடத்திற்கு சென்றுள்ளது. ஒருகாலத்தில் பலரால் ட்ரோல் செய்யப்பட்டு வந்த ஆர்சிபி அணி, தனது விட்டுக்கொடுக்காத குணத்தால் இன்றைக்கு முதலிடத்தை பிடித்து மாஸ் காட்டியுள்ளது.
டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி டாஸ் வென்ற போதிலும், பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதனைத் தொடர்ந்து, பேட்டிங்கில் இறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் அபிஷேக் போரெல் 28 ரன்களை எடுத்தார். கருண் நாயர் 4 ரன்களுடன் வெளியேறினார்.
ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டதால், அடுத்து களமிறங்கிய நட்சத்திர ஆட்டக்காரரான கே.எல். ராகுல், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் மூன்று பவுண்டர்களுடன் 39 ரன்களில் 41 ரன்களை எடுத்தார். அதன் பிறகு வந்த அக்சர் படேல் 15 ரன்களுடனும், அஸ்டோஸ் சர்மா 2 ரன்களுடனும் வெளியேறினர். டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 பந்துகளில் 34 ரன்களை குவித்தார்.
ஆனால், அதற்கு பின்னர் வந்த வீரர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பியதால், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை மட்டுமே டெல்லி அணி எடுத்தது.
இந்நிலையில், 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி, ஆரம்பத்திலேயே தடுமாறியது. ஓபனிங் பேட்ஸ்மேனான ஜேக்கப் போத்தேல் 12 ரன்கள் எடுக்க, விராட் கோலி நிதானமான விளையாடி 51 ரன்களை சேர்த்தார். பின்னர் இறங்கிய படிக்கல், டக் அவுட் ஆகி வெளியேற, ரஜத் பட்டிதாரும் 6 ரன்களில் நடையை கட்டினார்.
இப்படியே சென்றால் ஆர்சிபி அணி தோற்றுவிடும் என அனைவரும் கருதிய நிலையில்தான், குர்னல் பாண்டியா மாஸ் என்ட்ரியை கொடுத்தார். பந்துகளை நாலாபுறமும் சிதறவிட்ட பாண்டியா, வெறும் 47 பந்துகளுக்கு 73 ரன்களை குவித்தார். இறுதியில் டிம் டேவிட் 5 பந்துகளில் 19 ரன்களை அதிரடியாக எடுக்க, 18.3 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு ஆர்சிபி அணி வெற்றி இலக்கை எட்டியது.
இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் 2025 சீசனில் ஆர்சிபி அணி தனது 7வது வெற்றயை பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது. இரண்டாவது இடத்தில் குஜராத் அணியும், மூன்றாவது இடத்தில் மும்பை அணியும், நான்காவது இடத்தில் டெல்லி அணியும் இருக்கின்றன.
