பெங்களூரு: ஐபிஎல் தொடரின் இன்றைய 42 ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பெங்களூருவில் இன்று மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
பெங்களூரு முதலில் பேட்டிங்
தொடக்கத்தில் களமிறங்கிய பிலிப் சால்ட், விராட் கோலி கூட்டணி பெரிய ஷாட்டுகளுக்கு செல்லாமல் தேவையான நேரங்களில் பவுண்டரிகளை விளாசி ரன்களை உயர்த்தி வந்தனர். இதனால் 5 ஓவர் முடிவில் பெங்களூருவுக்கு 51 ரன்கள் சேர்ந்தது. பவர் பிளேவில் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்த விராட் கோலி நின்று விளையாடி ராஜஸ்தான் பவுலர்ஸ்களை பதம் பார்த்தார். 7 ஆவது ஓவரில் பிலிப் சால்ட் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் கோலியுடன் இணைந்து ரன்களை உயர்த்தினார். 10 ஓவர் முடிவில் பெங்களூருவுக்கு 83 ரன்கள் சேர்ந்தது. 12 ஆவது ஓவரில் விராட் கோலி 32 பந்துகளுக்கு அரை சதத்தை எட்டினார். அடுத்து அபாரமாக ஆடி வந்த தேவ்தத் படிக்கல் 26 பந்துகளுக்கு அரை சதம் அடித்து அசத்தினார். பெங்களூரு 15 ஓவர் முடிவில் 156 ரன்களை எடுத்திருந்த நிலையில், விராட் கோலி 42 பந்துகளுக்கு 70 ரன்களில் கேட்ச் தந்து வெளியேறினார். அடுத்து வந்த டிம் டேவிட் 23 ரன்கள், ரஜத் படிதார் 1 ரன், ஜிதேஷ் சர்மா 20 ரன்கள் சேர்க்க 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து ராஜஸ்தானுக்கு 206 ரன்கள் இலக்கு வைத்தது.
சந்தீப் சர்மா சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
ராஜஸ்தான் சேசிங்
206 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி ஓப்பனிங் இறங்கி தொடக்கத்திலேயே சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி ஆட்டத்தை தொடங்கினர். ராஜஸ்தான் 4 ஓவர் முடிவில் 46 ரன்களை எடுத்து இருந்தது. 14 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இரண்டு சிக்ஸர்களை விளாசி எதிர்பார்ப்பை கூட்டினார். வந்த அணைத்து பந்துகளையும் பெரிய ஷாட்டுக்குக்கு முயற்சித்து வந்ததால் புவனேஷ்வர் குமார் வீசிய 5 ஆவது ஓவரில் கிளீன் போல்டாகி 12 பந்துகளில் 16 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த நிதிஷ் ராணா 28 பந்துகளுக்கும், ரியான் பராக் 22 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களை சேர்த்தது. கடைசி 6 ஓவர்களுக்கு வெற்றி பெற ராஜஸ்தான் அணிக்கு 66 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ஹெட்மயர், ஜூரேல் இருந்தனர். ஜூரேல் தேவையான நேரங்களில் சிக்ஸர்களை அடித்து ரன்கள் மீதான அழுத்தத்தை குறைத்து வந்தார். 11 ரன்களில் ஹெட்மயர் ஆட்டமிழக்க சுபம் துபே களத்துக்கு வந்து பவுண்டரி விளாச ஆட்டம் விறுவிறுப்பாக போனது. கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தானுக்கு 18 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
19 ஆவது ஓவரில் ஜூரேல் விக்கெட் பெங்களூருவுக்கு திருப்புமுனையாக இருந்தது. ஆட்டத்தை முடித்துக்கொடுக்கும் நிலையில் இருந்த அவர் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 47 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் முதல் பந்திலேயே வெளியேறினார். களத்துக்கு ஹசரங்கா வர ராஜஸ்தானுக்கு 6 பந்துகளுக்கு 16 ரன்கள் தேவை. முதல் பந்தில் சுபம் துபே கேட்ச் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். துஷார் தேஷ்பாண்டே, ஹசரங்காவுக்கு சிங்கிள்ஸ் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களில் சுருண்டது. பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வென்றது.
பெங்களூருவில் ஜோஷ் ஹேசல்வுட் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்