புதுடெல்லி: 2025ஆம் ஆண்டின் ஐபிஎல் சீசனில் 48 ஆவது போட்டி இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் டெல்லி-கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்தது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்ற நிலையில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து பேட்டிங்கில் கொல்கத்தா அணி களம் இறங்கியது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 5 ஃபோர்கள் ஒரு சிக்ஸர் என அதிரடியாக தொடங்கினாலும் கூட 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அவரோடு ஜோடி சேர்ந்து ஆடிய நரைனும் தொடக்கத்தில் 2 சிக்ஸர்கள், 2 ஃபோர்கள் என 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடத்தொடங்கியவர், விப்ராஜ் நிஹாம் பந்தில் அவுட் ஆனார்.
மூன்றாவதாக களம் இறங்கிய அஜிங்க்யா ரஹானேவும் 26 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனார். நான்காவதாக விளையாட வந்த அங்க்கிரிஷ் ரகுவன்ஷி சற்று நிதானமாக ஆடி 32 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சமீரா பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர், வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
6ஆவதாக விளையாட வந்த ரிங்கு சிங் 25 பந்துகளில் 36 ரன்கள் குவித்த நிலையில் விப்ராஜ் நிஹாம் வீசிய பந்தில் அவுட் ஆனார். அவருக்கு அடுத்து வந்த ரஸ்ஸல் 17 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். 8 ஆவதாக களம் இறங்கிய ரோவ்மேன் பவல்வெறும் 5 ரன்களிலும், அடுத்து வந்த அனுகுல் ராய் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 10 ஆவது வீரராக களம் இறங்கிய ஹர்ஷித் ராணா ரன் ஏதும் எடுக்கவில்லை. அவருக்கு அடுத்து வந்த வருண் சக்ரவர்த்தி ஒரே ஒரு ரன்மட்டும் எடுத்திருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து 204 ரன்களை கொல்கத்தா அணி எடுத்தது. டெல்லி அணியின் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். விப்ராஜ் நிஹாம், அக்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் எடுத்திருந்தனர்.
இதையும் படிங்க: சூர்யவன்ஷி துவண்டு போன நேரத்தில் கை கொடுத்த வி.வி.எஸ் லட்சுமண்... கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றிய தருணம்!
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் போரெல் இரண்டு பந்துகளில் ஒன்றில் ஃபோர் எடுத்த நிலையில் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய ஃபாஃப் டு பிளெசிஸ் நிதானமாக ஆடி 2 சிக்ஸர்கள், 7 ஃபோர்கள் என 45 பந்துகளில் 62 ரன்களை குவித்த நிலையில் நரைன் பந்தில் அவுட் ஆனார். மூன்றாவதாக ஆட வந்த கருண் நாயர் 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நான்காவதாக வந்த ராகுல் 7 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து விளையாடிய அக்சர் படேல் நிதானமாக ஆடி 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். 6ஆவது வீரராக களம் இறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரே ஒரு ரன் மட்டும் எடுத்து வந்த வேகத்தில் திரும்பினார். 7 ஆவதாக வந்த விப்ராஜ் நிஹாம் 18 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஸ்ஸல் பந்தில் அவுட் ஆனார்.
8ஆவது வீரராக களம் இறங்கிய அசுதோஷ் சர்மா 7 ரன்களிலும், 9ஆவது வீரராக வந்த மிட்செல் ஸ்டார்க் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர். 10 ஆவதாக ஆட வந்த துஷ்மந்த சமீர 2 ரன்கள் எடுத்திருந்தார். 11ஆவதாக களம் இறங்கிய குல்தீப் யாதவ் ஒரே ஒரு ரன் மட்டும் எடுத்திருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணியால் 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.