சென்னை: இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதனிடையே நேற்று சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, “அடுத்து வரும் 6 போட்டிகளையும் வென்று ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இப்படி ஒரு நிலையிலிருந்து எப்படி வெல்வது என்பதற்கான ப்ளூ ப்ரிண்டை RCB அணி கடந்த ஆண்டு அமைத்துக் கொடுத்துள்ளது. ஒருவேளை நாங்கள் தகுதி பெறாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் கடந்த காலங்களிலும் இதே போன்று தொடர் தோல்விகளை சந்தித்துள்ளோம். ஆனால், பிரச்சனைகளை சரி செய்து அடுத்த ஆண்டே சாம்பியன் பட்டம் வென்றுள்ளோம்.
அடுத்து வரும் அனைத்து போட்டிகளையும் எங்களை சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பாகத் தான் பார்க்கிறோம். எந்த வாய்ப்பையும் தவறவிடமாட்டோம்” என்றார். இளம் வீரர்கள் குறித்து கேட்ட போது, ”இளம் வீரர்களைப் பற்றி கேட்கிறீர்கள். நாங்கள் முதலில் இளம் வீரர்களை கண்டடைய வேண்டும். ஆனால், நடப்பு சீசனின் அதிக ரன்கள் எடுத்த டாப் 20 வீரர்களைப் பாருங்கள். அதில் எத்தனை இளம் வீரர்கள் இருக்கிறார்கள்? அதிகபட்சம் ஒன்றிரண்டு பேர் மட்டுமே இருப்பார்கள். நல்ல திறமையான வீரர்களை எனக்கும் பிடிக்கும்.
கடந்த 2-3 ஆண்டுகளில் பயமில்லாமல் ஆடும் வீரர்களுக்கான ஆட்டமாக போட்டி மாறியிருப்பதையும் அறிகிறேன். ஆனால், நாங்கள் அதிகமாக அனுபவ வீரர்களைத் தான் நம்பியிருக்கிறோம். இளம் வீரர்களால் ஒரே பாணியில் தான் ஆட முடிகிறது. ஆனால், அனுபவ வீரர்களால் போட்டியின் சூழலை புரிந்து பல வழிகளில் ஆட முடியும். திறமையான இளம் வீரர்கள், அனுபவ வீரர்கள் இரண்டு தரப்புக்கும் இடையே ஒரு சமநிலை இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
கடினமான சூழல்களில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்கள் தான் எனக்கு தேவை. அப்படிப்பட்ட வீரர்களின் வயதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆயுஷ் மாத்ரே ஆடிய விதம் எங்களுக்கு வியப்பாகத்தான் இருந்தது” என பதிலளித்தார். சென்னை அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் அதிகமாக ரன்கள் அடிப்பதில்லையே. என்ன காரணம்? என கேட்கப்பட்ட கேள்விக்கு, ”டாப் ஆர்டர் மட்டும் ரன் அடிக்கிறார்களா? எங்களுக்கு டாப் ஆர்டரில் ஒரு உந்துதல் கூட கிடைப்பதில்லை.
இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள்; கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த ’கிங்’ கோலி!
டாப் ஆர்டரிலிருந்து 75 ரன்களுக்கு மேல் வந்தால் பேட்ஸ்மேன்கள் அவர்களுக்கான அந்தந்த ஆர்டர்களிலும், இடத்திலும் இறங்குவார்கள். நல்ல தொடக்கம் கிடைக்காத போது அனைத்து வீரர்களின் பேட்டிங் ஆர்டரும் மாறுகிறது. அதுதான் பிரச்சனை.' என்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இன்றைய போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடிபட்டு வருகின்றனர். இன்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.