சென்னை: ஐபிஎல் தொடரின் இன்றைய 43 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைடர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் இன்று மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்தது. இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிக முக்கியம் வாய்ந்ததால் ரசிகர்கள் சென்னை ஸ்டேடியத்தில் குவிந்திருந்தனர். நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்துடன் வந்து போட்டியை கண்டு களித்தது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்தது.
சென்னை பேட்டிங்
தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேக் ரஷீத், ஆயுஷ் மத்ரே களமிறங்கினர். முகமது ஷமியின் முதல் ஓவர், முதல் பந்திலேயே ஷேக் ரஷீத் ஸ்லீப்பில் கேட்ச் தந்து வெளியேறினார். அடுத்து வந்த சாம் கரன் 10 பந்துகளுக்கு மட்டுமே நிலைத்தார். 9 ரன்களில் அவரும் வெளியேறினார். அடித்து ஆடி வந்த ஆயுஷ் மத்ரேவால் பவர் பிளேவில் ஓரளவுக்கு ரன்கள் சேர்ந்தது. ஆனால், 6 ஆவது ஓவரில் அவரும் 19 பந்துகளில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ் கூட்டணி ஆட்டத்தின் நிலையை மாற்றியது.

6 ரன்களில் வெளியேறிய தோனி
அணியில் புதிதாக களமிறக்கபட்ட டெவால்ட் ப்ரீவிஸ் 4 சிக்ஸர்களை விளாசினார். சென்னையின் பழைய வீரர்களை நினைவூட்டும்படியாக அதிரடியாக ஆடி வந்த டெவால்ட் ப்ரீவிஸ் 25 பந்துகளில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜா 21 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த ஷிவம் துபே, எம்எஸ் தோனி, நூர் அகமது ஆகியோரிடம் இருந்து பலமான ஆட்டம் வெளிப்படாததால் ஒரு சில ரன்களில் ஆட்டமிழந்தனர். தீபக் ஹூடா ஓரளவுக்கு ஆடி 22 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர் முடிவில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்த சென்னை அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சிறப்பாக பந்து வீசிய ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
ஹைதராபாத்துக்கு 155 ரன்கள் இலக்கு
பலம் வாய்ந்த ஹைதராபாத் அணி 155 ரன்கள் இலக்கை நோக்கி களம் கண்டது. ஓப்பனிங்கில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆட வந்தனர். முதல் ஓவரை கலீல் அகமது வீச இரண்டே பந்துகளில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அபிஷேக் சர்மா. அடுத்து வந்த இஷான் கிஷன் நிதானமாக ஆடி பவுண்டரிகளை அவ்வப்போது விளாசி வந்தார். இருப்பினும் 5 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணிக்கு ஒரு விக்கெட் இழப்பில் 36 ரன்கள் மட்டுமே சேர்ந்தது. இந்த மாதிரியான சூழலில் அடுத்த ஓவரிலேயே அன்சூல் காம்போஜ் பந்தில் டிராவிஸ் ஹெட் கிளீன் போல்டாகி வெளியேறினார். அதிரடி ஆட்டக்காரர் கிளாசெனும் நிலைக்காமல் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சால் 10 ஓவருக்கு ஹைதராபாத் 3 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்து இருந்தது.
12 ஆவது ஓவரில் இஷான் கிஷன் பவுண்டரியை நோக்கி அடித்த பந்தை சாம் கரண் எகிறி கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அது வரை நின்று ஆடி வந்த இஷான் கிஷன் 34 பந்துகளுக்கு 44 ரன்களில் ஆட்டமிழக்க கமிந்து மெண்டிஸ் வந்தார். 14 ஆவது ஓவரில் 37 பந்துகளுக்கு 49 ரன்கள் தேவைப்பட்டபோது அனிகேத் வர்மா 19 ரன்களில் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். அடுத்து நிதிஷ் குமார் ரெட்டி வந்தார்.
16 ஓவர் முடிவில் 24 பந்துகளுக்கு 28 ரன்கள் மட்டுமே ஹைதராபாத்துக்கு தேவைப்பட்டது. விக்கெட் விழாமல் இதே நிலையில் ஆடினால் வெற்றி வாய்ப்பு ஹைதராபாத் பக்கம். நிதிஷ் குமார் ரெட்டி, கமிந்து மெண்டிஸ் இருவரும் அடித்து இரண்டு இரண்டு ரன்களாக ஓடி எடுத்து வந்தனர். அவ்வப்போது பவுண்டரிகளும் கிடைத்தது. கடைசி 18 பந்துகளுக்கு 12 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டது.
19 ஆவது ஓவரில் இந்த கூட்டணி ரன்களை ஓடியே எடுத்து இலக்கை எட்டியது. ஹைதராபாத் அணி 155 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிளே ஆப்பில் இடம்பெற அடுத்த 6 போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் இந்த போட்டியையும் சென்னை அணி தவற விட்டது.
சென்னையில் சிறப்பாக பந்து வீசிய நூர் அகமது 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்