சென்னை: ஐபிஎல் தொடரில் அணி வீரர்கள் சூதாட்ட நபர்களிடம் சிக்காமல் இருக்க வேண்டும் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. 18வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சீசனில் முதல் பாதி 7 போட்டிகளை அனைத்து அணிகளும் நிறைவு செய்யவுள்ளது. இரண்டாம் பாதி ஆட்டங்கள் வரும் வாரங்களில் நடக்கவுள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளில் அதிக ரசிகர்களை கொண்ட அணிகள் இந்த தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை, மும்பை அணிகள் இதுவரை மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இதுவரை கோப்பை வெல்லாத அணிகளான பஞ்சாப், டெல்லி, பெங்களூரு அணிகள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த சீசன் இரண்டாம் பாதியில் ரசிகர்களால் பிரபல அணிகளாக கருதப்படும் சென்னை, மும்பை, ஹைதராபாத் அணிகள் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் மேட்ச் பிக்சிங்: 18வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிசிசிஐ 10 அணியின் உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும் சூதாட்டம் (match fixing) குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், முன்னதாக சூதாட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளதாக ஊழல் தடுப்பு பாதுகாப்பு பிரிவு (ACSU) கருதுகிறது. சூதாட்டம் குறித்து ஐபிஎல் அணிகளை தொழிலதிபர் தொடர்பு கொண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என ACSU தெரிவித்துள்ளது.
இதனிடையே சூதாட்ட குழுவினர் ரசிகர் என்ற தொனியில் ஓட்டல் மற்றும் போட்டிகளில் வீரர்களை அணுக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரசிகர் தொனியில் விலை மதிப்புமிக்க நகைகள், பரிசுகளை கொண்டு ஐபிஎல் அணியின் குடும்பத்தினர், வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்களை ஈர்க்க முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆல் ரவுண்டராக ஜொலித்த வில் ஜேக்ஸ்; வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் புதிய சாதனை!
இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபரிடம் ஐபிஎல் அணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் நேர்மையை கெடுக்கும் சூதாட்ட செயல்களை தடுக்க நடவடிக்கை எடுப்பதில் பிசிசிஐ உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த 2016, 2017 ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விளையாட தடை விதிக்கப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.