திருச்சி: தமிழகத்தில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும். செல்வம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும் உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் நோய், நொடியின்றி வாழவும், குடும்பம் செழித்தோங்கவும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை பூச்சொரிதல் நடைபெறும்.
இந்த விழா காலங்களில் மரபு மாறி தன்னைத் தானே வறுத்திக் கொண்டு பக்தர்களுக்காக 28 நாட்கள் அம்மனே பச்சைப் பட்டினி விரதம் இருப்பது இந்த கோயிலின் தனிச் சிறப்பு. இந்த நாட்களில் அம்மனுக்கு அரிசி, துள்ளுமாவு, இளநீர் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது.
இதனால் இந்த கோயிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை மற்றும் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
இதில் முக்கியமாக பெண்கள் அதிகமானோர் தீச்சட்டி ஏந்தியும் பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை தூக்கியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த் திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி, கொடி மரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க கோயிலின் உள்பிரகாரத்தில் இருக்கும் தங்க கொடி மரத்திற்கும், அஸ்திர தேவர்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்று மந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க மாரியம்மன் படம் தாங்கிய கொடியினை கொடிமரத்தில் ஏற்றினர்.
சித்திரை தேரோட்ட விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வருகிறார். தினமும் அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம் யானை, சேஷா, மரக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று (ஏப்ரல் 14) இரவு அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. காலை 10.31 மணிக்குள் மேல் அம்மன் தேரில் எழுந்தருளி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: கோவில்பட்டி பூவனநாத சுவாமி கோயில் திருவிழாவில் ராட்டினம் ஓட்ட தடை; பொதுமக்கள் அதிருப்தி!
தேரோட்ட விழாவை காண வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டது் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டது. குற்ற சம்பவங்களை தடுக்கவும் தேர் திருவிழாவை காண வந்த பக்தர்கள் பாதுகாப்புக்காக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில் 1 ஏடிஎஸ்பி,18 டிஎஸ்பி, 25 காவல் ஆய்வாளர்கள், 60 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 2 நாட்களுக்கு சமயபுரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு 100 ரூபாய் கட்டண தரிசனத்தை ரத்து செய்து இலவச தரிசனத்தை கோயிலில் இணை ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு வெளியிட்டு ஏற்பாடுகளை செய்திருந்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்