மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நவகிரக ஸ்தலங்களில் ஒன்றான சௌந்தர நாயகி சமேத நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு கேது பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
வாசுகி நாகம் மூங்கில் காடாக இருந்த இந்த இடத்தில் சிவனை வழிபட்டதாக புராண வரலாறு கூறுகின்றது. இதனால் இது நவகிரகங்களில் கேதுவுக்கு உரிய கோவிலாக வழிபாடு செய்யப்படுகிறது.
நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு மற்றும் கேது எதிர் எதிர் திசைகளில் சுற்றி வரும் தன்மை கொண்டவை. நவக்கிரகங்களில் முதன்மை மூர்த்தியான ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயர்ச்சி அடைகிறார்.
கேது பெயர்ச்சி
ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு காலம் நின்று பலன் தரக்கூடிய இந்த நிழல் கிரகங்களின் பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று (26 ஆம் தேதி) மாலை 4.20 மணிக்கு கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
கேது பகவான் பரிகார ஸ்தலமான இக்கோயிலில் இன்று கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதை அடுத்து மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய 9 ராசியை உடையவர்கள் பரிகாரம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயிலில் கேது பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று முதல் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. இன்று மதியம் மூன்று மணிக்கு பூர்ணாஹுதி, மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் இசைக்க யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்தது. தொடர்ந்து கேது பகவானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு நிறைவாக யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கேது பகவானுக்கு சரியாக மாலை 4 மணி 20 நிமிடத்தில் கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசிக்கும் போது சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பட்டு, கல்யாணசுந்தரம், கார்த்திகேயன் ஆகியோர் அபிஷேகம் மற்றும் பூஜைகளை நடத்தி வைத்தனர். கேது பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அன்பரசன் தலைமையிலானோர் செய்திருந்தனர்.
ராகு பெயர்ச்சி
அதேபோல, கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் கிரிகுஜாம்பிகை பிறையணியம்மன் சமேத நாகநாதசுவாமி திருக்கோயில், திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் ஆகியோரால் தேவாரப்பாடல் பெற்ற சைவத் திருத்தலமாகும். இத்தலத்தில் திருமால், சூரியன், சந்திரன், பிரம்மா, கார்கோடகன் ஆகியோரால் வழிபடப்பட்ட திருக்கோயிலாகும். மேலும் சுசீல முனிவரின் குழந்தையை தீண்டியதால் ராகு பகவானுக்கு ஏற்பட்ட சாபத்தை நீங்க, நாகநாத சுவாமியை மகா சிவராத்திரி தினம் 2வது மற்றும் 4வது காலத்தில் வழிபட்டு தனது பாவத்தை நிவர்த்தி செய்த பெருமை மிகு தலமாகும்.
நவக்கிரக ஸ்தலங்களில் ராகு பகவானுக்குரிய பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இத்தலத்தில் ராகு பகவான் நிருதி மூலையில், மங்கல ராகுவாக, தனது இருமனைவியரான ஸ்ரீ நாகவள்ளி மற்றும் ஸ்ரீ நாககன்னி ஆகியோருடன், வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளித்து வருகிறார். இவரை ராகு கால நேரத்தில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் ராகு தோஷம், திருமணத்தடை, புத்ர சந்தான தடை, காலசர்ப தோஷம் ஆகியவை விலகும் என்பது ஐதீகம். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்யும் போது அபிஷேக பால் நீல நிறமாக தெரியும் என்பது வேறு எங்கும் காண முடியாது.
நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக ஒவ்வொரு கால கட்டங்களை எடுத்துக் கொள்ளும். அதுபோல ராகு மற்றும் கேது ஆகியோர் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஓர்முறை பெயர்ச்சியாவர். மீன ராசியில் உள்ள ராகு தற்போது ஒரு ராசிக்கட்டம் பின்னோக்கி நகர்ந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியானார். இதே வேளையில் இவருக்கு நேர் எதிரே உள்ள கேது பகவானும் தற்போதுள்ள கன்னி ராசியில் ஒரு ராசி கட்டம் பின்னோக்கி நகர்ந்து சிம்மராசிக்கு பெயர்ச்சியானார்.
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில், ராகு பெயர்ச்சி விழா, கடந்த 23ம் தேதி புதன்கிழமை முதல் பரிகார லட்சார்ச்சனை தொடங்கி வரும் 28ம் தேதி திங்கட்கிழமை இரவு வரை நடைபெற்று நிறைவு பெறுகிறது.
இந்த ராகு பெயர்ச்சியை முன்னிட்டு கடந்த 24ம் தேதி வியாழக்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் முதல் கால யாக பூஜை தொடங்கி, தொடர்ந்து இன்று மாலை 4ம் கால யாக பூஜை நிறைவாக பூர்ணாஹூதியும் அதனையடுத்து கடங்கள் புறப்பாடாகி மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மூலவர் நாகவள்ளி நாககன்னி சமேத மங்கல ராகு பகவானுக்கு தங்க கவசமுடன் பல வண்ண நறுமணமலர் மாலைகள் கொண்ட சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க, விசேஷ பூஜைகள் செய்து ராகு பெயர்ச்சியாகும் மாலை 04.20 மணிக்கு கோபுர ஆர்த்தி மற்றும் பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது. இதில் பல்லாயிர பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்