கன்னியாகுமரி: உலகம் முழவதும் இன்று (ஏப்.20) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கன்னியாகுமரியில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு பிரார்த்தனையும், ஆடம்பர கூட்டு திருப்பலியும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று ஈஸ்டர் பண்டிகை. இந்த ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து, விருந்து படைத்து சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில், கன்னியாகுமரி கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் ஈஸ்டர் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. முன்னதாக, நேற்று (ஏப்ரல் 19) இரவு 10.30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்ட நிலையில், நள்ளிரவு 11 மணிக்கு இயேசு உயிர்ப்பு பெருவிழாவின் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதையடுத்து, ஆயர் நசரேன் சூசை மெழுகுவர்த்திரியில் சிலுவை அடையாளம் வரைந்து ஒளி ஏற்றினார். பின்னர் மக்கள் அனைவரும் அந்த மெழுகுவர்த்திரியில் இருந்து தாங்கள் கொண்டு வந்த மெழுகுவர்த்திரியில் ஒளி ஏற்றினர். பின், திருப்பலியின் நடுபகுதியில் ஆலய மணி அடிக்கப்பட்டு, இயேசு உயிர்ப்பு பெருவிழா நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசு புகழ் வாழ்த்து பாடல் பாடினர்.
இதுகுறித்து பேசிய ஆயர் நசரேன் சூசை, “கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி. இதனைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் என கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் வாழும் மக்கள் யாவரும் இன்றைய நாளில் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடுகிறோம்.
இந்த ஆண்டு நம்பிக்கையின் ஆண்டு. யூபிலி ஆண்டு. இயேசு நம்மோடு வாழ்கிறார். இந்த நம்பிக்கையை தருகின்ற ஆண்டு. இயேசு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உயிர்த்தெழுந்தது வரலாற்று நிகழ்வு. இந்த ஆண்டில் இயேசுவின் பணிகளில் ஈடுபடுவது மிக சிறந்த செயலாகும். எளியவர்கள், முதியவர்கள், ஆதரவற்றோர்களுக்காக முன்னெடுக்கப்படும் அனைத்து பணிகளுமே இயேசுவின் பணிகள்தான்” என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.