-By இரா. சிவக்குமார்
மதுரை: மதுரையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஆன்மிகத்திற்கும் மட்டுமன்றி, கோடை வாசஸ்தலமாகவும் திகழ்வது அழகர் கோயில். கள்ளழகர், முருகன், ராக்காயி அம்மன், நூபுர கங்கை, மூலிகை வனம் என இதன் பல்வேறு அம்சங்கள் சுற்றுலாவாசிகளின் ஒருநாள் பயணத்தில் சிறந்ததொரு அனுபவத்தைத் தரக்கூடியது திருமாலிருஞ்சோலை எனப்படும் அழகர்மலை. வாருங்கள் சுற்றி வருவோம்.
வரலாற்றுப் பழமையும், ஆன்மிகப் பெருமையும் கொண்டது மண் மதுரை. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டு, உலகின் பழமையான நகரங்களுள் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது. மீனாட்சி அம்மன் கோயில் மதுரையின் அடையாளமாகத் திகழ்ந்தாலும், மதுரைக்கு வெளியே உள்ள அழகர்மலையையும் தன்னுடைய முகமாகக் கொண்டு விளங்குகிறது. மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள அழகர்மலை சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கிய நூல்களிலும் பாடப்பெற்ற பெருமை வாய்ந்தது.
பெயருக்கு ஏற்றாற்போல் அழகும், சிறப்பும் கொண்ட அழகர்மலை திருமால் என்ற பெருமாள் அருள் பாலிக்கும் திருமாலிருஞ்சோலை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. கீழே வைணவத்தலம். மலையேறிச் சென்றால், சுமார் 3 கி.மீ. தூரத்தில் சைவத் திருத்தலமாகவும் முருகனின் ஆறாவது படைவீடாகவும் போற்றி வணங்கப்படும் பழமுதிர்சோலை முருகன் கோயில் அமைந்துள்ளது. அங்கிருந்து அரை கி.மீ. தூரம் சென்றால், நாட்டார் வழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழும் ராக்காயி அம்மன் கோயிலும் அமைந்துள்ளன. இங்குதான் நூபுர கங்கை என அழைக்கப்படும் தீர்த்தம் உள்ளது. இதில் தலையையும், உடலையும் நனைத்துக் குளிப்பதும் கங்கையில் குளித்ததற்கு இணையான மிகப் புண்ணியமிக்கதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
அழகர் மலை
அழகர் கோயில் தலைமைப் பட்டர் அம்பி கூறுகையில், 'ஏழுமலைகளுக்கு அதிபதியாக இருக்கக் கூடியவர் ஸ்ரீகள்ளழகர் சுந்தரராஜப் பெருமாள். வடக்கே திருவேங்கடமும், தென் தமிழகத்திற்கு திலகம் போன்றும், தென்திருப்பதி எனவும் அழகர்மலை அழைக்கப்படுகிறது. தீர்த்தம், தலம், மூர்த்தி ஆகிய மூன்று விசேஷ வைபவங்களைக் கொண்டு திகழ்கிறது. அழகர்மலையின் பெயரைச் சொன்னாலே நம் மனமெல்லாம் அழகர் நிறைந்துவிடுவார் எனப் பாடி திருமாலிருஞ்சோலை என குறிப்பிடுகின்றனர். மகா விஷ்ணுவே இந்த மலை முழுவதும் வியாபித்துள்ளார். இதன் சிறப்பை 6 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். அகத்தியர் முதலான முனிவர்கள் மட்டுமன்றி, பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகிய தமிழ் இலக்கியங்களும் கூட அழகர் மலையின் வளம், வனம், அழகர் சிறப்பு பெரிதாகப் போற்றிப் பாடப்படுகிறது.
'மதுரையின் வரப்பிரசாதம்'
சிலப்பதிகாரத்தில் காடு காண் காதையில், கோவலன், கண்ணகி வரலாற்றைச் சொல்லும் போது, அழகர்மலை, மாலவன் குன்றத்திலுள்ள திருமாலின் சிறப்பு, தீர்த்தத்தின் மகிமை ஆகிவையெல்லாம் பாடப்பட்டுள்ளன. இலக்கியங்களிலும், புராணங்களிலும் கூட அழகர்மலை மிகச் சிறப்பாக பாடப்பட்டுள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய இயற்கை வளங்களோடு கூடிய இடமாகவும் அழகர்மலை அமைந்துள்ளது. மூலவர் பரமசாமி, உற்சவர் கள்ளழகர் சுந்தரராஜப் பெருமாள் உலகமே வியந்து பார்க்கக்கூடிய சித்திரைத் திருவிழாவின் நாயகன் இங்குதான் உள்ளார்' என்றார்.
காலை 5.30 மணிக்குத் துவங்கி நண்பகல் 12.30 மணி வரையும், பிறகு மாலை 4.30 மணிக்குத் துவங்கி இரவு 9.30 மணி வரையும் திருக்கோயில் நடை திறந்திருக்கும். கோயிலின் வெளி வாயிலிலிருந்து சுமார் அரை கி.மீ. தூரமுள்ள அழகர் கோயிலுக்கு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக 3 பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. கோட்டை வாயிலில் உள்ள பதினெட்டான்படி கருப்பணசாமி அனைவருக்கும் அருள் பாலிக்கிறார். வழக்கம் போல் கோயிலின் உள்ளே இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனங்கள் உண்டு.
பழமுதிர்சோலை முருகன் திருக்கோயில்
சோலைமலை முருகன் கோயில் தலைமை அர்ச்சகர் முத்துக்குமார் கூறுகையில், 'மதுரைக்கு அருகில் 6 ஆவது படைவீடான பழமுதிர்சோலை முருகன் திருக்கோயில் எழில்மிகு அழகர்மலையில் அமைந்துள்ளது. வள்ளி-தேவயானை சமேதரராக முருகன் இங்கே காட்சி அளிக்கிறார். ஒவ்வொரு படை வீட்டிலும் முருகப்பெருமான் ஒரு திருவிளையாடல் நிகழ்த்துகிறார். தமிழ் மூதாட்டி ஔவைக்கு நாவல் மரத்தின் மீதிருந்து சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு ஔவையின் ஞானத்தை உலகறியச் செய்த இடம் இந்த பழமுதிர்சோலை.
அதே போன்று முருகனின் ஆயுதமான வேலாயுதத்திற்கு இங்கு ஆதிவேல் என்ற பெயரில் தனி சன்னதி இடம் பெற்றுள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பாகும். திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் செய்து விட்டு இங்கு வேலோடு வந்து காட்சி தருகிறார் என்று அருணகிரிநாதர், 'சூரர் குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற பெருமாளே' என திருப்புகழில் பாடியுள்ளார். இந்த ஆலயத்தின் தல விருட்சமாக நாவல்மரம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி திருவிழாவின் போது மட்டும் அம்மரத்தில் நாவல் பழம் பழுக்கும். மற்ற நாவல் மரங்கள் ஆவணி மாதத்திலேயே பழுத்து முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது' என்கிறார்.
மலையின் கீழிருந்து பழமுதிர்சோலைக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுமார் 4 கி.மீ. தொலைவு அழைத்துச் செல்ல நபர் ஒருவருக்கு ரூ.10 கட்டணமாகப் பெறப்படுகிறது. 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. அதிகாலை 5.30 மணியளவில் நடை திறக்கப்பட்டு இடைவெளியின்றி மாலை 6 மணி வரை முருகன் கோயில் இயங்குகிறது.
பழமுதிர்சோலையிலிருந்து சுமார் அரை கி.மீ. தூரம் ராக்காயி-பேச்சி அம்மன் கோியிலும், நூபுர கங்கையும் அமைந்துள்ளன. சாலையின் ஒரு ஓரமாக வேண்டுதல் கருதி மக்கள் கற்களை அடுக்கி வைத்திருப்பதைக் காணலாம். பல்வேறு அரிய வகை மூலிகைகளைக் கொண்டுள்ள இம்மலையின் நூபுர கங்கை அருகே பல்வேறு மூலிகைப் பொடி கடைகள் உள்ளன.
'காசிக்கு இணையான ஆன்மீகத் தலம்'
மூலிகைக் கடை வைத்துள்ள அழகேந்திரன் கூறுகையில், 'இந்த மலையின் மேலே சித்தர் ராமதேவர் ஜீவசமாதியான இடமும் உள்ளது. அழகர்மலை அரிய வகை மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியாகும். மூலிகைகள் பல உள்ளன. காசிக்கு இணையான ஆன்மீகத் தலம் இது. பெருமாளின் சிலம்பிலிருந்து உருவாகி ஓடுவதால் இதற்கு நூபுர கங்கை என்று பெயர்' என்கிறார்.
'அயினிப் பலா மரங்கள்'
தாவரங்கள் குறித்த ஆய்வாளர் கார்த்திகேயன் கூறுகையில், மதுரைக்கு கடம்பவனம் எனப் பெயர் அருளிய கடம்பமரமும், திருமருதத்துறை எனப் பெயர் அருளிய மருத மரமும் இங்கு பரவலாக உள்ளன. இது தவிர்த்து ஆல்-அத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஆலம், அரசு, நாட்டு அத்தி, இச்சி, புண்ணிய அரசு, குருக்கத்தி போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன. பலா வகையைச் சேர்ந்த அயினிப் பலா மரம் பொதுவாக மேற்குத் தொடர்ச்சி மலைக்கு உரித்தானது என்பார்கள். ஆனால் இங்கு பழமுதிர்சோலை எதிர்புறம் உள்ள ஒரு சிறு மேட்டில் பத்து அயினிப் பலா மரங்கள் உள்ளன. இதன் சங்க இலக்கியப் பெயர் ஆசினி. இவை தவிர்த்து தணக்கம், கோங்கம், குரவம், அழிஞ்சில், உசிலை, கபிலப் பொடி மரம், தொரட்டி, பராய், செம்பூவன் போன்ற மரங்கள் உள்ளன. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி வகைத் தாவரமும் அழகர் மலையில் உண்டு. சிறு குறிஞ்சான், பிரண்டை, விழுதி, மர விழுதி, ஆவாரை, விராலி போன்ற மருத்துவ குணமுடைய தாவரங்களும் இங்குள்ளன. கடும் நஞ்சுடைய ஒடுவன், எட்டி போன்ற மரங்களும் உள்ளன என்கிறார்.
கொதிக்கும் கோடை வெப்பத்திலிருந்து சற்று இளைப்பாற திருமாலிருஞ்சோலை அழகர்மலை காட்டு வழியே நடந்து சென்று, பழமுதிர்சோலையைக் கடந்து, சிலம்பாற்று தீர்த்தத்தில் குளித்து விட்டு வந்தால், உடல் மட்டுமன்றி மனமும் மிக மிக குளிர்ச்சியடையும்...