"கிராமம் உயர நாடு உயரும்" என்றார் காந்தியடிகள். நாடு சுதந்திரம் அடைந்த போது, 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வசித்து வந்தார்கள். அதனால் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. வேளாண்மையில் தொடங்கி, பால் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும், கிராமப்புற மேம்பாடு, கிராமப்புற வறுமை ஒழிப்பு, கிராமப்புற வேலைவாய்ப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
1984-ம் ஆண்டு ராஜீவ் காந்தி நாட்டின் பிரதமாரன பின், கிராமப்புற மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் கூடுதல் பங்கு கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக பஞ்சாயத்துராஜ் சட்டம் கொண்டு வந்தார். இதன் பின்னர், இந்த சட்டம் நாட்டில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊராட்சிகளின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆய்வு மேற்கொண்டது. நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) உள்ளூர்மயமாக்குதல் மற்றும் அடிமட்ட நிர்வாகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாக, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பஞ்சாயத்து முன்னேற்ற குறியீட்டை (PAI) அறிமுகப்படுத்தியுள்ளது.

இது நாடு முழுவதும் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் முன்னேற்றத்தை அளவிடுவதற்கான ஒரு முறையாகும். பஞ்சாயத்தில் வறுமை இல்லாத மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்வாதாரங்கள், ஆரோக்கியமான சூழல், குழந்தைகளுக்கு உகந்த பஞ்சாயத்து, தண்ணீர் வசதி நிறைந்த கிராமங்கள், சுத்தமான மற்றும் பசுமை பஞ்சாயத்து, தன்னிறைவு பெற்ற உள்கட்டமைப்பு கொண்டவை, சமூகநீதி மற்றும் சமூகரீதியாக பாதுகாப்பான பஞ்சாயத்து, நல்லாட்சி நடத்தும் ஊராட்சி மற்றும் பெண்களுக்கு உகந்த பஞ்சாயத்து ஆகிய 9 கருப்பொருள்களில் பஞ்சாயத்துகளின் செயல்திறனை PAI அளவீடு செய்கிறது.
இதில் சிறந்த செயல்பாடுகளில் மாநிலவாரியாக, குஜராத் 346 கிராம பஞ்சாயத்துகளுடன் முன்னணியில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களை மகாராஷ்டிரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில பஞ்சாயத்துகள் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் சிறந்த பஞ்சாயத்துகளின் கருப்பொருள்வாரியான மதிப்பெண்கள்
- வறுமை இல்லாத & மேம்படுத்தப்பட்ட வாழ்வாதாரங்கள் - கட்டளை, விழுப்புரம் மாவட்டம்
- ஆரோக்கியமான பஞ்சாயத்து - கவரப்பட்டு, கடலூர் மாவட்டம்
- குழந்தைகளுக்கு சாதகமான பஞ்சாயத்து - வெள்ளிமேடுபேட்டை, விழுப்புரம் மாவட்டம்
- போதுமான நீர் வசதி உள்ள பஞ்சாயத்து - வேலம்பூர், மதுரை மாவட்டம்
- சுத்தமான மற்றும் பசுமையான பஞ்சாயத்து - வேலம்பூர், மதுரை மாவட்டம்
- தன்னிறைவு பெற்ற உள்கட்டமைப்பு கொண்ட பஞ்சாயத்து - வேங்கைவாசல், செங்கல்பட்டு மாவட்டம்
- சமூகநீதி மற்றும் சமூகப் பாதுகாப்பான பஞ்சாயத்து - எட்டூர், திருவள்ளூர் மாவட்டம்
- நல்லாட்சி கொண்ட பஞ்சாயத்து: சாஸ்தாவிநல்லூர், தூத்துக்குடி மாவட்டம்
- பெண்களுக்கு சாதகமான பஞ்சாயத்து - கருவாட்சி, விழுப்புரம் மாவட்டம்
மேலும், செயல்திறன் அடிப்படையில் தமிழ்நாட்டின் முதல் 10 ஊராட்சிகள்...
கிராம பஞ்சாயத்து | வட்டாரம் | மாவட்டம் | செயல்திறன் மதிப்பெண் |
மாதம்பட்டு | திருவெண்ணெய்நல்லூர் | விழுப்புரம் | 74.07 |
தென்மங்கலம் | திருவெண்ணெய்நல்லூர் | விழுப்புரம் | 72.29 |
எரையூர் | வானூர் | விழுப்புரம் | 71.63 |
பனபாக்கம் | திருவெண்ணெய்நல்லூர் | விழுப்புரம் | 71.26 |
புதுரை | வானூர் | விழுப்புரம் | 71.21 |
உளியநல்லூர் | நெமிலி | ராணிப்பேட்டை | 70.77 |
பாப்பாபட்டி | செல்லம்பட்டி | மதுரை | 70.69 |
பிரம்மதேசம் | விக்கிரவாண்டி | விழுப்புரம் | 70.54 |
திருப்பாச்சனூர் | கோளியனூர் | விழுப்புரம் | 70.45 |
ஆர்.அய்யம்பாளையம் | பழனி | திண்டுக்கல் | 70.41 |
செயல்திறன் குறைவாக உள்ள பஞ்சாயத்துகள்...
கிராம பஞ்சாயத்து | வட்டாரம் | மாவட்டம் | செயல்திறன் மதிப்பெண் |
தாண்டவராயன்சோழகன்பேட்டை | பரங்கிப்பேட்டை | கடலூர் | 37.50 |
செம்மாங்குடி | திருவையாறு | தஞ்சாவூர் | 38.89 |
கவனிப்பாக்கம் | கிளியனூர் | விழுப்புரம் | 39.06 |
மளியக்காடு | பட்டுக்கோட்டை | தஞ்சாவூர் | 39.34 |
வி.நல்லாளம் | மயிலம் | விழுப்புரம் | 39.42 |
கீழப்பாளையூர் | ஸ்ரீமுஷ்ணம் | கடலூர் | 39.58 |
பண்ணவாயல் | பட்டுக்கோட்டை | தஞ்சாவூர் | 39.63 |
சித்தாநாங்கூர் | திருவெண்ணெய்நல்லூர் | விழுப்புரம் | 39.64 |
அழகியநாயகிபுரம் | சேதுபாவாசத்திரம் | தஞ்சாவூர் | 39.69 |
உத்தமசோழமங்கலம் | பரங்கிப்பேட்டை | கடலூர் | 39.71 |
இவ்வாறு மத்திய அரசின் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
