கோயில்களில் காணப்படும் கோபுரங்களுக்கு எவ்வளவு முக்கியத்தும் என்பதை 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்ற வரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். எந்த கோயிலுக்கு சென்றாலும், அனைவரையும் முதலில் வரவேற்பது கோபுரம் தான். தூரத்தில் இருந்து கோயிலின் கோபுரம் தென்பட்டவுடன் மனதில் மகிழ்ச்சி கூடும். தமிழகத்தில் உள்ள பல பழமையான கோயில்களில் உள்ள கோபுரங்கள், பல வரலாற்று சிறப்புகளை கொண்டுள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் இருக்கும் கோயில்களில் உயரத்தால் சிறப்பு பெற்ற சில கோயில்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில், ஸ்ரீரங்கம்: திருச்சியை அடுத்த திருவரங்கம் அரங்கநாதர் கோயில் பழமையும் பெருமையும் வாய்ந்தது. இது இந்தியாவின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்றாகும். அது மட்டுமல்லாமல் இந்த கோயிலின் கோபுரமே தமிழகத்தின் மிக உயர்ந்த கோபுரமாக உள்ளது. மொத்தமாக 21 கோபுரங்களை கொண்ட இந்த கோயிலின் ராஜகோபுரம் 236 அடி கொண்டது. ஆசியாவிலேயே 2வது உயரமான கோபுரமாகவும் அறியப்படுகிறது.

அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் மொத்தம் 4 கோபுரங்கள் உள்ளன. கோயிலின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கோபுரம் 217 அடி உயரம் கொண்டது. இது தமிழகத்தின் 2-வது உயரமான கோபுரமாக திகழ்கிறது. இந்த கோயில் விஜயநகர மன்னர்களின் ஆட்சி காலத்தில் கிருஷ்ணதேவராயரால் துவங்கப்பட்டு நாயக்கர்களின் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக் கோயிலின் கோபுரத்தின் அடித்தளம் கிரானைட் கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் கார்த்திகை தீபத் திருநாள் பிரசித்திப் பெற்றதாகும்.
உலகளந்த பெருமாள் கோயில், திருக்கோயிலூர்: மகா விஷ்ணு எடுத்த முக்கியமான 10 அவதாரங்களில் 5-வது அவதாரமான வாமன அவதாரம் நடைபெற்ற நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக அமைந்தது தான் திருக்கோயிலூரில் அமைந்துள்ள உலகளந்த பெருமாள் கோயில். இந்த கோயிலின் கோபுரம் 192 அடி உயரத்தில் தமிழகத்தின் உயரமான கோபுரங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோயில் விக்கிரகம் முன்புறத்தில் 16 கைகளுடன் சக்கரத்தாழ்வாராகவும் பின்பக்கத்தில் நரசிம்மர் வடிவத்திலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

காசி விஸ்வநாதர் கோயில், தென்காசி: இந்த கோயில் உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலின் கோபுரம் கி.பி 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீக்கிரையாகி 1967 வரை மொட்டையாய் பொலிவிழந்து நின்றது. பின்னர், 1963-ல் ராஜகோபுரத் திருப்பணிக்குழு ஆரம்பிக்கப்பட்டு 1990ல் 180 அடி உயரத்தில் ராஜகோபுரமாக கட்டி முடிக்கப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோயில், மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மட்டும் மொத்தம் 10 கோபுரங்கள் உள்ளன. இவற்றில் தெற்கு கோபுரம் 170 அடி உயரத்தில் உள்ளது. கோயிலின் கிழக்கில் உள்ள கோபுரம் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அது மட்டுமல்லாமல் இதுவே கோயிலின் பழமையான கோபுரமாகவும் அறியப்படுகிறது.
ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர்: பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது. ஆழ்வார்கள் 12 பேரில் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் ஆகிய இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூரை இருப்பிடமாக கொண்டவர்கள். இதன் 11 அடுக்குகள் கொண்ட 193 அடி உயர ராஜகோபுரம் பழங்காலத்தில் இந்தியாவின் மிகப் பெரிய கோபுரமாக கருதப்பட்டது. தமிழக அரசின் சின்னத்தில் இருக்கும் கோபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் தான்.

ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்: பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாக திகழ்வது காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயில். சிவபெருமானை நினைத்து பார்வதி வழிபட்டத் தலமாகும். இந்த கோயிலின் கோபுரம் 192 அடி உயரத்தில் காட்சியளிக்கிறது. இந்த ராஜகோபுரம் விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி 1509-ம் ஆண்டு என்று கல்வெட்டு குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.