திருச்சி புராதானமான திருக்கோயில்கள் அணிவகுத்துக் காட்சி தரும் மாநகரமாக உள்ளது. திருச்சிக்கு சுற்றுலா வருபவர்கள் அங்கு அமைந்திருக்கும் வழிபாட்டு தலங்களை பார்க்காமல் செல்வது இல்லை. ஏன், பலரும் திருச்சியில் உள்ள கோயில்களை வழிபடுவதற்காக பிரத்யேகமாக ஆன்மிக சுற்றுலா செல்வது வழக்கம். அதன் அடிப்படையில், திருச்சியில் உள்ள பிரபல கோயில்கள் மற்றும் நடை திறக்கும் நேரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில்: 108 வைணவ தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். 21 கோபுரங்களுடன் 157 ஏக்கர் பரப்பளவில் இக்கோயில், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுகிறது. விழா நாட்கள் தவிர மற்ற நாட்களின் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.15 மணி முதல் இரவு 7.30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதில், காலை 7.30 மணி முதல் 9 மணி வரை மூலவருக்கு பொங்கல் பூஜை நடைபெறும் என்பதால் பக்தர்கள் சேவைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பின்னர், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் அனுமதிப்பார்கள். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்தும், சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தொடர்ச்சியாக பஸ்கள் உள்ளன.

ஜம்புகேஸ்வரர் கோயில்: ஐம்பூதங்களில் ஒன்றான நீருக்கு உரிய தலமாக, திருச்சி திருவானக்காவல் ஐம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் அமைந்துள்ளது. காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடை திறந்திருக்கும். பின்னர், 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணி வரை இடைவேளை இன்றி திறந்திருக்கும். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் பஸ்கள் அனைத்தும் இந்த கோயில் வழியாக செல்கின்றன.
சமயபுரம் மாரியம்மன் கோயில்: தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலில் பூச்சொரிதல் விழா, தெப்ப திருவிழா உள்பட பல திருவிழாக்கள் நடந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சித்திரை திருவிழா தேரோட்டம் முக்கியமானது. தினமும் அதிகாலை 5.30 மணி முதல் இடைவேளை எதுவும் இன்றி இரவு 9 மணி வரை திறந்து இருக்கும். சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து 30 நிமிடங்களுக்கு ஒரு முறை இக்கோயிலுக்கு பஸ் உள்ளது. இந்தாண்டு, மார்ச் 9ம் தேதி பூச்சொரிதல் திருவிழா தொடங்கி நடைபெற உள்ளது.

வயலூர் முருகன் கோயில்: காவிரியின் கிளை வாய்க்காலான உய்யகொண்டான் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை சுற்றி, வயல் மற்றும் வாழைத் தோப்புகள் என பசுமையாக இருப்பதால் இந்த ஊருக்கு வயலூர் என பெயர் ஏற்பட்டுள்ளது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர், மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும்.
ஐயப்பன் கோயில்: திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ளது ஐம்பது ஆண்டுகள் பழைமையான ஐயப்பன் கோயில். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பின்பற்றும் அதே பூஜை நடைமுறைகள் இந்த கோயிலிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
தினமும் காலை 6 மணியளவில் நடை திறக்கப்பட்டு, மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு சாத்தப்படுகிறது. உறையூர் மற்றும் தில்லைநகர் வழியாக செல்லும் அனைத்து டவுன் பஸ்களிலும் ஏறி ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாம்.

விராலிமலை முருகன் கோயில்: திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மலை மீது அமைந்திருக்கும் இந்த கோயிலில் தான் முருகன் அருணகிரி நாதருக்கு வேடன் வடிவில் காட்சி அளிக்கிறார். தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும். பின்னர், மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு சாத்தப்படும்.
இதையும் படிங்க:
தமிழகத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 இடங்கள்? வியக்க வைக்கும் பாரம்பரிய இடங்களை தெரிஞ்சுக்கோங்க!
2025ல் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 கோயில்கள்..தமிழ்நாட்டிலயே 3 இருக்கு!