இட்லி, தோசையை தொட்டு சாப்பிடுவதற்கு என்ன தான் வகை வகையான சட்னி, சாம்பார் இருந்தாலும் தட்டில் இட்லி பொடி போட்டு, நடுவில் குழி வெட்டி நல்லெண்ணெய் விட்டு பிசைந்து தொட்டு சாப்பிடும் சுகமே தனி தான். அதிலும், ஒவ்வொரு ஊருக்கு ஏற்ப இட்லி பொடியின் சுவை மாறுபடும். அந்த வகையில், வெறும் 4 பொருட்களை வைத்து செய்யக்கூடிய காரைக்குடி செட்டிநாடு ஸ்டைல் இட்லி பொடியை இம்முறை நீங்கள் செய்து பாருங்கள். காரசாரமாக இருக்கும் இந்த இட்லி பொடியை தொட்டு சாப்பிட்டால் 4 இட்லி கூடுதலாக சாப்பிடுவீர்கள்.
இட்லி பொடி அரைக்க தேவையான பொருட்கள்:
- கடலை பருப்பு - 1/2 கப்
- வெள்ளை உளுந்து பருப்பு - 1/2 கப்
- வெள்ளை எள் - 3 டேபிள் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 10
- பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
- கல் உப்பு - தேவையான அளவு
காரசாரமான இட்லி பொடி செய்வது எப்படி?:
- அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும் கடலை பருப்பு சேர்த்து கை விடாமல் வறுக்கவும். பருப்பு நிறம் மாறி வாசனை வந்ததும், தனியாக ஒரு தட்டில் மாற்றி வைக்கவும். அடுத்ததாக, உளுந்து பருப்பு சேர்த்து பொன்னிறமாக வந்ததும் பருப்பை அதே தட்டிற்கு மாற்றி வைக்கவும்.
- பின்னர், வெள்ளை எள் சேர்த்து பொரிந்து வந்ததும் தட்டில் மாற்றவும். இப்போது கடாயில் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து சூடானதும் காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து தட்டில் வைக்கவும்.
- நாம் வறுத்து வைத்த கலவையுடன் பெருங்காயத்தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து ஆற வைக்கவும். இப்போது காய்ந்த மிக்ஸி ஜாரில், வறுத்து வைத்ததை சேர்த்து அரைக்கவும். விருப்பத்திற்கேற்ப நைசாக அல்லது கொரகொரப்பாக அரைத்தால் காரைக்குடி ஸ்பெஷல் இட்லி பொடி தயார்.
- இதனை காற்று புகாத டப்பாவில் சேர்த்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.
குறிப்பு:
- வாணலியில் பருப்புகளை வறுக்கும் போது, அடுப்பை குறைந்த தீயில் வைத்து கை விடாமல் வறுக்க வேண்டும்.
- மிக்ஸி ஜாரில் பொடி அரைக்கும் போது, ஜாரில் தண்ணீர் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்