'வந்தாரை வாழ வைக்கும் சென்னை' என வந்தோர் வாழ்ந்தோரெல்லாம் புகழும் சென்னைக்கு, தனி அறிமுகம் தேவையில்லை. இந்தியாவில் எந்த மூளையில் இருப்பவர்களுக்கும் சென்னை பரீட்சயப்பட்ட இடமே. மால், ஷாப்பிங் தெருக்கள் தொடங்கி கடல் வரை சென்னையில் சுற்றிப்பார்க்க இடங்கள் சிதறிக்கிடக்கின்றன. சென்னையில் உள்ள ஒவ்வொரு இடங்களும் தெருக்களும் தனக்கே உரிய கதைகளை தாங்கி நிற்கிறது.
சென்னை வாசிகள், வார இறுதி நாட்களில் அவர்களது பொன்னான நேரத்தை சில நேரங்களில் அமைதியாகவும், சில நேரங்களில் கொண்டாட்டங்களுடன் செலவிட நினைப்பார்கள். அப்படி, நீங்கள் சென்னையில் அமைதியான மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவான இடத்தில் நேரத்தை செலவிட விரும்பினால் உங்களுக்கான பதிவு தான் இது.

தட்சிணசித்ரா (Dakshina chitra heritage museum): தமிழ்நாடு, ஆந்திரா,தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய அனைத்து பிராந்திய மாநிலங்களிலிருந்தும் கலைப்பொருட்கள் மூலம் தென்னிந்தியாவின் உண்மையான சாரத்துடன் கூடிய கலாச்சாரத்தை தட்சிணசித்ரா வழங்குகிறது. தென்னிந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் பாரம்பரியத்தின் இந்த புகழ்பெற்ற இடம், இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் பொக்கிஷமாகும்.
தட்சிணசித்ரா வெறுமனே ஒரு அருங்காட்சியம் மட்டுமல்ல. பல்வேறு கண்காட்சிகள், நிகழ்ச்சிகள் இங்கு நடக்கின்றன. முட்டுக்காடு பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இது அமைந்துள்ளது. செவ்வாய்கிழமை தவிர காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் சென்று வரலாம்.
நுழைவுக் கட்டணம்?: பெரியவர்களுக்கு - ரூ.100, 5 முதல் 12 வயது உள்ள குழந்தைகளுக்கு ரூ.30, 13 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு ரூ.50 வசூலிக்கப்படுகிறது.
பிர்லா கோளரங்கம் (Birla planetarium): காந்தி மண்டபம் சாலையில் அமைந்துள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் ஒருங்கிணைந்த பகுதியான பிர்லா கோளரங்கம், சென்னையில் உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. விண்வெளி மற்றும் அதற்கு அப்பால் அறிய ஆர்வமுள்ள அனைவருக்கும் இது ஒரு சிறந்த இடம். வானியல் நிகழ்வுகளை பற்றி தெரிந்து கொள்ளவும் மனதுக்கு புத்துணர்ச்சியூட்டும் இடமாக இது நிச்சயம் இருக்கும். காலை 10.15 மணி முதல் மாலை 4.35 மணி வரை மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 15 ரூபாயும், பெரியவர்களுக்கு 30 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தேசியக் கலைக்கூடம் (National Art Gallery): வெள்ளிக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் இந்த தேசியக் கலைக்கூடம் எழும்பூரில் அமைந்துள்ளது. இங்கு, கலை மற்றும் கைவினைப்பொருட்கள் குறிப்பாக 14 முதல் 15ம் நூற்றாண்டுகளின் ஓவியங்கள் உள்ளன. புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், தஞ்சாவூர் ஓவியங்கள், வெண்கலச் சிற்பங்கள், பாறை மற்றும் குடைக் கலை மற்றும் பண்டைய கையெழுத்து பிரதிகளை கண்டு ரசிக்கலாம். பெரியவர்களுக்கு 15 ரூபாய், குழந்தைக்கு 10 ரூபாய் மற்றும் மாணவர்களுக்கு 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.

விண்டேஜ் கேமரா அருங்காட்சியம் (Vintage Camera Museum): புகைப்படம் எடுப்பது உங்கள் பொழுதுபோக்கு அல்லது ஆர்வமாக இருந்தால், இந்த இடம் நிச்சயம் உங்களுக்கானது தான். இங்கு, 1997ம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்ட 1500க்கும் மேற்பட்ட கேமராக்கள் மக்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெரிய வடிவ மரப்பெட்டி கேமராக்கள், கடந்த நூற்றாண்டின் கேமராக்கள் மற்றும் 90களின் முற்பகுதியில் இருந்து சின்னமான கோடாக்ஸ் வரை அனைத்து வகையான கேமராக்களையும், இந்த அருங்காட்சியகத்தில் காணலாம். ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் விண்டேஜ் கேமரா அருங்காட்சியம் அமைந்துள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மக்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது. நுழைவு கட்டணம் ரூ.100.