நாடாளுமன்ற எம்.பி மஹுவா மொய்த்ரா தனது 50 வயதில் காதல் திருமணம் செய்துகொண்டதையடுத்து இதுபோன்ற காதல்கள் யாருக்கு சாதகமாகவும், யாருக்கு பாதகமாகவும் அமைகின்றன என்பது குறித்து பேசப்பட்டு வருகிறது.
கடந்த நூற்றாண்டுகளுடன் ஒப்பிடும்போது 21ஆம் நூற்றாண்டில் ஆண்கள், பெண்கள் என அனைவருமே ஸ்டீரியோடைப்களை உடைத்து பலதரப்பட்ட மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக, ஒரு விஷயத்தின் மீதான அணுகுமுறை என்பது பெரிதளவில் மாறியிருக்கிறது. ஆனால் எல்லா காலத்திலும் மாறாமல் இருப்பது என்னவோ காதல்தான். ‘காதலுக்கு கண்ணில்லை’, ‘காதலுக்கு வயது ஒரு தடையில்லை’ என்று சொல்வார்கள். அது இக்காலத்திற்கும் நன்கு பொருந்தித்தான் போகிறது. குறிப்பாக சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்தபிறகு, பள்ளிப்பருவத்தினர் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே நட்பு மற்றும் காதல் போன்ற உறவுகளை எளிதில் வளர்க்கின்றனர். அப்படியொரு திருமணம் குறித்த செய்திதான் கடந்த சில நாட்களாக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது.
பேசுபொருளான மஹுவா மொய்த்ரா - பினாகி திருமணம்!
நாடாளுமன்றத்தில் பெண்ணியம் மற்றும் தனது மக்களுக்கான உரிமை குறித்த அனல்பறக்கும் பேச்சுகளால் நன்கு அறியப்பட்டவர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா. குறிப்பாக 2023ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பணம் கொடுத்து கேள்வி கேட்கவைத்த விவகாரத்தில் பதவியை இழந்த இவர், 2024 நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் சார்பாக போட்டியிட்டு மீண்டும் எம்.பியானார். இவர் தனது 50 வது வயதில் ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் பிஜேடி எம்.பியும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பினாகி மிஸ்ராவை திருமணம் செய்துகொண்டதாக வெளியான புகைப்படங்கள் இன்றுவரை பேசுபொருளாக இருக்கிறது.
Thank you everyone for the love and good wishes!! So grateful pic.twitter.com/hbkPdE2X7z
— Mahua Moitra (@MahuaMoitra) June 5, 2025
கடந்த மாதம் 30 ஆம் தேதி ஜெர்மனியில் வைத்து இருவரும் எளிய முறையில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களும் இருவரும் ஜோடியாக வருகிற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. 50 வயதைத் தாண்டிய நடிகர்கள் சிலர் இதுபோன்று காதல் திருமணங்களை செய்திருந்தாலும் மஹுவா மொய்த்ராவின் திருமணம் அரசியல் வட்டாரம் மட்டுமல்லாமல் அனைவரின் கவனத்தையுமே ஈர்த்திருக்கிறது. 50 வயதில் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் மொய்த்ராவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
50ஐ தாண்டிய காதல் குறித்து பகிர்ந்த பிரபலங்கள்
கில்லி படத்தின்மூலம் தமிழ் மக்களிடையே நன்கு பரிச்சயமான பிரபல நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தி தனது 57வது வயதில் ரூபாலி பருவா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய காதல் கதை சற்று வித்தியாசமானது. தனது காதல் பற்றி ஒரு பேட்டியில் பகிர்ந்த அவர், 'ஒருவர்மீது ஒருவருக்கு ஏதோ ஒரு சுவாரஸ்யம் இருப்பதை இருவருமே உணர்ந்ததாகவும், கணவன் மனைவியாக ஒன்றாக பயணிக்க முடியும் என்று நினைத்ததாலேயே திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் மகிழ்ச்சியாக இருக்க வயது ஒரு பொருட்டே இல்லை' என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் நடிகர் மிலிந்த் சோமன் தனது 52வது வயதில் இளம்வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதேபோல் பழம்பெரும் நடிகரான கபீர் பேடி தனது 70வது வயதில் இந்த முடிவை எடுத்தார். அதுகுறித்து அவர் கூறுகையில், 'எந்த வயதிலும் வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை எடுக்கமுடியும்' என்றார். மேலும், 'காலம் மக்களை இளமையாக காட்டவும், உணர்வுடன் செயல்பட வைத்திருப்பதாகவும், ஒரு காலத்தில் நாம் பார்த்து பயந்த தடை வயது இல்லை' எனவும் கூறினார்.
இதுபோன்ற காதல் திருமணங்கள் வெளிநாடுகளில் சகஜம் என்றாலும் இந்தியாவை பொருத்தவரை சமூகம் மறுவரையறை செய்யப்படுகிறது என்பதை பார்க்க முடிகிறது.
குழந்தைகளுக்கு பிறகு காதல் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
குறிப்பிட்ட வயதுக்கு பிறகு மறு திருமணம் பற்றி யோசிப்பது குறித்து ஒரு சிலர் தங்களது கருத்துகளை தெரிவித்திருக்கின்றனர். மஹுவா மொய்த்ராவை பொருத்தவரை அவருக்கு இதுவரை குழந்தைகள் இல்லாததால் 50 வயதில் திருமணம் என்ற முடிவை எளிதில் எடுத்திருக்கலாம், ஆனால் இளம்வயது திருமண வாழ்க்கையில் தோல்வியுற்ற பலர், மீண்டும் புதிய வாழ்க்கையை தொடங்க நினைத்தாலும் குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளையும் கருத்தில்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
“மறுமணம் என்பது மீண்டும் அன்பை கண்டுபிடிப்பது மட்டுமல்ல; தனது குழந்தையை ஒருவர் சொந்த குழந்தையாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரை கண்டுபிடிப்பதாகவும். குழந்தையின் அமைதி, ஆறுதல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை அந்த நபர் பெற்றாலொழிய அது மகிழ்ச்சியான இரண்டாவது வாய்ப்பு அல்ல” என்கிறார் 2 மகள்களுக்கு அம்மாவான பிங்கி சத்ரானி.
அதேபோல் ஒருவரை டேட்டிங் செய்துவரும் 54 வயதான விபு நவர்னே திருமணம் குறித்து யோசித்துவருவதாக கூறுகிறார். “எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் எனக்கு ஒருவரை பிடித்திருப்பதை என் குழந்தை ஏற்றுகொள்கிறதா? அதேபோல் என்னை பிடித்திருப்பவர் என் குழந்தையையும் ஏற்றுக்கொண்டு அவரை மதிக்கிறாரா என்பது குறித்த முடிவை எடுப்பது கடினமாக இருக்கிறது” என்கிறார்.
இதுகுறித்து உறவு பயிற்சியாளரும், மருத்துவ உளவியலாளருமான டாக்டர் தனுஸ்ரீ மாத்தூர் கூறுகையில், “எந்த வயதில் இருந்தாலும், குழந்தைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது ஒரு தனிநபரின் முடிவாக இருக்கவேண்டும். குழந்தைகள் நிச்சயமாக பெற்றோரின் பொறுப்புதான் என்றாலும் குழந்தை எப்படி உணருகிறது என்பதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முடிவெடுப்பது என்பது தனது சொந்த மகிழ்ச்சியை சமரசம் செய்வதாகும். இதை பல தலைமுறைகளாக பெற்றோர் செய்துவருகின்றனர்” என்கிறார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.