இலங்கை: தாய்லாந்தில் நடந்த பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 6 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை (ஏப்ரல் 4) அரசுமுறை பயணமாக இலங்கை சென்றார். நேற்று மாலை கொழும்பு விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் மோடியை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத், சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ, மீன் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட ஐந்து உயர்மட்ட அமைச்சர்கள் வரவேற்றனர்.
அதன் பின்னர் இன்று (ஏப்ரல் 5) காலை சுதந்திர சதுக்கத்தில் நடந்த ஏற்பாட்டில் கலந்துகொண்ட பிரதமரை இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக வரவேற்று மரியாதை செலுத்தினார். மேலும், பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருதான ‘ஸ்ரீலங்கா மித்ர விபூஷண’ விருது அளித்து இலங்கை அதிபர் கௌரவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தமது சமூக வலைத்தள பக்கத்தில், '' “இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக அவர்களால் இன்றைய தினம் 'இலங்கை மித்ர விபூஷண்' என்ற விருது தமக்கு வழங்கப்பட்டது மகத்தான பெருமைக்குரிய விடயமாகும். இந்த உயரிய கௌரவம் எனக்கு மட்டும் உரித்தானது அல்ல, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற உயர் மரியாதை'' என குறிப்பிட்டிருந்தார்.
கிரிக்கெட் மூலமான பிணைப்பு!
— Narendra Modi (@narendramodi) April 5, 2025
1996 உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட அன்றைய இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுடன் கலந்துரையாடியமையையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். இந்த அணியினர் எண்ணற்ற விளையாட்டு இரசிகர்களது மனதைக் கவர்ந்திருந்தனர்! pic.twitter.com/QVm6evt9AB
இலங்கையில் தான் பங்கேற்கும் நிகழ்வுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்திய பூர்விக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களை சந்தித்ததாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், '' இந்திய வம்சாவளி தமிழர் தலைவர்களுடனான சந்திப்பு பலனளித்தது. இந்த சமூகம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே உயிருள்ள பாலமாக உள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக 10,000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித தலமான சீதா எலியா கோயில் மற்றும் பிற சமூக மேம்பாட்டுத் திட்டங்களை கட்டுவதற்கு இந்தியா ஆதரவளிக்கும்'' என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு ‘ஸ்ரீலங்கா மித்ர விபூஷண’ விருது: இலங்கை அரசு கெளரவிப்பு!
அதுபோல, 1996 ஆம் ஆண்டு நடந்த உலக கிரிக்கெட் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியினரையும் பிரதமர் சந்தித்துள்ளார். அதுகுறித்த பதிவில், '' கிரிக்கெட் மூலமான பிணைப்பு. 1996 உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட அன்றைய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் கலந்துரையாடி பெருமகிழ்வடைந்தேன். இந்த அணியினர் எண்ணற்ற விளையாட்டு விளையாடி ரசிகர்களது மனதைக் கவர்ந்திருந்தனர்'' என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இலங்கை சுதந்திர சதுக்கத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, '' கொழும்பில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவுத் தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன். இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு, ஐக்கியம் மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கான உயர்பணியில் தமது வாழ்வை தியாகம் செய்த இந்திய அமைதிகாக்கும் படையின் துணிச்சல் மிக்க வீரர்களை இச்சந்தர்ப்பத்தில் நாம் நினைவுகூர்கிறோம். அவர்களின் அசைக்க முடியாத தைரியமும், அர்ப்பணிப்பும் நம் அனைவரினதும் உத்வேகத்தின் ஆதாரமாக நிலைத்திருக்கின்றன'' என குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்