இஸ்லாமாபாத்: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அந்நாட்டுக்கு தனது முழு ஆதரவை அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பாவுக்கு கீழ் செயல்படும் 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' அமைப்பு, இத்தாக்குதலுக்கு வெளிப்படையாக பொறுப்பேற்றுள்ள நிலையில், சீனாவின் இந்த நிலைப்பாடு சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
காஷ்மீரில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான பெஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக துணை நிற்கும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பகிரங்கமாக தெரிவித்தன.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு முதலில் கண்டனம் தெரிவித்த சீனா, தற்போது பாகிஸ்தானுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விரைந்த மற்றும் நியாயமான விசாரணை வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் அரசு வானொலி வெளியிட்ட செய்தியில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானின் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார்-ஐ தொலைப்பேசி அழைத்துப் பேசியதாகவும், அப்போது பாகிஸ்தானில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலையிலும் அதன் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை உறுதி செய்வதில் சீனா உடன் இருக்கும் என வாங் யி உறுதியளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பயங்கரவாதத்தை எதிர்க்கும் தீவிர முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாகவும், அந்த நடவடிக்கைகளுக்கு சீனா உறுதுணையாக இருக்கும் எனவும் வாங் யீ தெரிவித்ததாகவும் வானொலி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானமாக செயல்பட்டு முடிவு எடுக்க வேண்டும் எனவும் வாங் யீ கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வாங் யீடம் பேசிய பாகிஸ்தான் துணைப் பிரதமர், "காஷ்மீர் தாக்குதல் சம்பவத்திற்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபிக்க தயாராக உள்ளோம். நாங்கள் இதில் ஈடுபடவில்லை, எங்கள் கையில் கறைப்படவில்லை" எனக் கூறியதாக தெரிகிறது.
இதையும் படிங்க: ஈரான் துறைமுக குண்டுவெடிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு; 1000க்கும் மேற்பட்டோர் காயம்! |
இந்த சம்பவம் குறித்துப் பேசிய பாகிஸ்தான் தகவல் தொடர்புதுறை அமைச்சர் அத்தாவுல்லா தரார், “தாக்குதல் சம்பவம் குறித்து பாகிஸ்தான் மீது இந்தியா வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பாகிஸ்தானால் திறம்படப் பதிலளிக்க முடியும் .அதனால், இந்த பதில்களை பாகிஸ்தானின் பலவீனமாக இந்தியா புரிந்து கொள்ளக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.