ஒட்டவா, கனடா: கனடா நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் பதவிக்கு லிபரல் கட்சியின் சார்பில் பிரதமர் மார்க் கார்னியும், கன்செர்வேடிவ் கட்சி சார்பில் பியர் பொய்லிவ்ரேவும் களமிறங்கினர்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது. இதில் ஆரம்பம் முதலே, ஆளுங்கட்சியான லிபரல் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. 343 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், லிபரல் கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இது லிபரல் கட்சியின் 4-வது தொடர் வெற்றியாகும்.
கனடாவில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த ஜனவரி மாதம் பதவி விலகினார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற நிலையில், கனடாவுக்கு ஏராளமான வரிகளை விதித்தார். இதனால், கனடாவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால், ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார்.
இதனைத் தொடர்ந்து, லிபரல் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மார்க் கார்னி, புதிய பிரதமராக பதவியேற்றார். வரும் அக்டோபர் மாதம் வரை பதவி காலம் இருக்கும் நிலையில், கனடா நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்த பிரதமர் மார்க் கார்னி, தேர்தலையும் அறிவித்தார். அதன்படி நேற்று (ஏப்ரல் 28) கனடா நாடாளுமன்றத்திற்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
மார்க் கார்னி யார்? மார்க் கார்னி கனடா மற்றும் இங்கிலாந்தின் மத்திய வங்கிகளில் தலைவராக பதவி வகித்தவர். இவர் கனடா மீதான அமெரிக்காவின் ஆதிக்கத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தவர். அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவோம்!, ஒரு காலமும் கனடா அமெரிக்காவின் 52-வது மாகாணமாக மாறாது! போன்றவற்றை முன் வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
Congratulations @MarkJCarney on your election as the Prime Minister of Canada and to the Liberal Party on their victory. India and Canada are bound by shared democratic values, a steadfast commitment to the rule of law, and vibrant people-to-people ties. I look forward to working…
— Narendra Modi (@narendramodi) April 29, 2025
இந்த நிலையில், கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில், "இந்தியா - கனடா நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்தவும், இந்திய மக்களுக்கு அதிக வாய்ப்புகளைத் திறக்கவும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.