கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைகாட்சி மையத்தின் மாணவரின் குறும்படம், 2025 ஆம் ஆண்டின் 78 ஆவது கேன்ஸ் திரைப்படவிழாவுக்கு திரைப்பட கல்லூரி மாணவர்கள் பிரிவில் அதிகாரப்பூர்வமாக தேர்வாகி உள்ளது.
சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைகாட்சி மையத்தில் சினிமா மற்றும் தொலைகாட்சி தயாரிப்பு துறை சார்பில் 'களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு பொம்மை' என்ற குறும்படம் தயாரிக்கப்பட்டது. சினிமா மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு துறையின் மாணவரான ஷாஹில் மனோஜ் இங்க்லே என்பவர் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார். ஐசிசிஆர் ஆப்ரிக்கா கல்வி உதவித் தொகையின் கீழ் சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைகாட்சி மையத்தில் பயிலும் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த கோகோப் கெப்ரேஹவேரியா டெஸ்ஃபே என்ற மாணவர் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். புதுமைக்கான சர்வதேச சினிமாவாக சத்யஜித் ரே சினிமா மற்றும் தொலைகாட்சி மையத்தால் இந்த குறும்படம் அர்பணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் 78 ஆவது கேன்ஸ் திரைப்படவிழா அடுத்த மாதம் பிரான்ஸில் நடைபெற உள்ளது. உலகின் முன்னணி திரைப்பட கல்வி நிறுவனங்கள் தயாரித்த குறும்படங்கள் பிரிவின் கீழ் இந்த குறும்படம் போட்டியிடுகிறது. இதற்கான அழைப்பு அண்மையில் சத்யஜித் ரே திரைப்பட கல்வி நிறுவனத்துக்கு வந்தது.
இதையும் படிங்க: நெல்லையில் வெளியிடப்பட்ட ‘யாதும் அறியான்’ போஸ்டர்!
இது குறித்து பேசியுள்ள சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைகாட்சி மையத்தின் டீன் மற்றும் பேராசிரியை சுகந்தா மஜூம்தர், "எங்கள் மையத்தின் மாணவர்களின் சினிமா திறமைகள் மதிப்புமிக்க சர்வதேச தளத்தில் அங்கீகரிக்கப்படும்போதெல்லாம் நம்பிக்கை உணர்வை உருவாக்குவதாக இருக்கிறது. இது எங்களை கவுரவப்படுத்தும் சிறப்பான தருணம் ஆகும். எங்கள் மாணவர்களால் நாங்கள் மிகவும் பெருமை அடைகின்றோம். இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என எனது மாணவர்களை வாழ்த்துகின்றேன்," என்றார்.
இது குறித்து பேசிய மாணவரும் தயாரிப்பாளருமான ஷாஹில் மனோஜ் இங்க்லே, "இந்த குறும்படம் எல்லைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒரு கதையாகும். நாடுகளைக் கடந்த பகிர்வு கண்ணோட்டத்தை கொண்டுள்ளது. கேன்ஸ் விழாவுக்கு தேர்வாகி இருப்பதன் மூலம் கனவு நனவாகி உள்ளது. சத்யஜித் ரே சினிமா மற்றும் தொலைகாட்சி மையத்தின் வளாகத்துக்குள் சர்வதேச சிந்தனை உள்ளது என்பதற்கான ஆதாரமாகவும் இந்த குறும்படம் திகழ்கிறது,"என்றார்.
இந்த குறும்படம் குறித்து பேசிய இயக்குநர் கோகோப் கெப்ரேஹவேரியா டெஸ்ஃபே, "புதிய சவால்களை நோக்கி செலுத்தும் கனவுகள் காண்பவர்களின், ஆழமான தனிப்பட்ட கதைகளைக் கொண்ட பயணத்தைப் பற்றி அவர்கள் மறு வடிவமைப்புக்கு உள்ளாவதை இந்த குறும்படம் பேசுகிறது. இதுவரை சொல்லப்படாத கதைகளை, மீளுருவாக்கங்களை கேன்ஸ் விழா கொண்டாடுகிறது,"என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.