சென்னை: கடந்த ஆண்டு வெளியான ’அமரன்’ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ’மதராஸி’. இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ’மதாராஸி’ திரைப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியது. அதன் பின்பு கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி வேகமாக வளர்ந்து வந்த நிலையில் இடையில் ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து ’சிக்கந்தர்’ திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அமைந்தது. அதனால் மதராஸி திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி சிக்கந்தர் பட வேலைகளில் மூழ்கினார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இதனால் இப்படத்தின் வெளியீடு பற்றி எதுவும் தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பெயரும் டைட்டில் டீசரும் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்னும் இருப்பதாக தெரிய வருகிறது.
தற்போது இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.‘அமரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படமானது அவரது 23வது படமாகும். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
#Madharasi #MadharasiFromSep5 😊👍 pic.twitter.com/qVRIFNHTUc
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 14, 2025
’அய்யப்பனும் கோஷியும்’ மலையாள படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுதீப் எளமோன் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 2020ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் ‘தர்பார்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து முருகதாஸ் மீண்டும் இயக்குநராக களமிறங்குகிறார். ஸ்ரீலக்ஷமி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வெளியாகலாம் என எதிர்பார்த்த நிலையில் அதற்கு முன்னதாகவே செப்டம்பர் மாதமே திரைக்கு வர உள்ளது. டைட்டில் டீசரில் சிவகார்த்திகேயனின் தோற்றம் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமாக இருந்தது.
‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு வித்யுத் ஜம்வால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் ஆகிய காரணங்களே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 13 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் சசிகுமார் - விஜய் சேதுபதி...?
இதற்கிடையில் கடந்த மாத இறுதியில் ’சிக்கந்தர்’ திரைப்படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களைப் பெற்று மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பையும் வசூலையும் பெறவில்லை. அதனால் ’மதராஸி’ திரைப்படத்தின் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் சிறப்பான படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’அமரன்’ திரைப்படம் உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதற்கடுத்ததாக வெளியாகும் திரைப்படம் ’மதராஸி’ என்பதால் அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் வெளியிட்டு தேதியை அறிவித்திருக்கின்றனர்.