சென்னை: நடிகர் ரகுவரனின் 17-வது நினைவு தினமான மார்ச் 19-ம் தேதி , ’ரகுவரன்: எ ஸ்டார் தட் டிஃபைட் டைம்’ (Raghuvaran : A Star That Defied Time) என பெயரிடப்பட்ட ஆவணப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ரகுவரனின் திரைப்பயணம், வாழ்க்கை உள்ளிட்டவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஆவணப்படம் அது. நீண்ட காலமாக காத்திருந்த அவரது ரசிகர்களும் திரைப்பட ஆர்வலர்களும் ரகுவரனை கொண்டாட இதனை பயன்படுத்தி கொண்டனர்.
ரகுவரன் எனும் பெரும் கலைஞனுக்கு இது ஒரு சிறந்த அஞ்சலியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த 36 வயதான ஹசீஃப் அபிடா ஹக்கீம், இந்த ஆவணப்படத்தை இயக்கி தயாரித்து ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். இது அவரது முதல் படைப்பாகும்.
ஈடிவி பாரத் சார்பாக அவருடன் உரையாடினோம். அப்போது அவர். “ரகுவரன் பற்றி ஆவணப் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் 2015-ம் ஆண்டில் எனக்கு உருவானது. பல ஆண்டுகள் ஆய்விற்குப் பின், கொரோனா முழுஅடைப்புக்கு பிறகு இந்த ஆவணப்படம் தயாரிப்பு நிலையை அடைந்தது.
சாதாரண திரைப்படம் போல இது சுலபமான விஷயம் இல்லை. சாதாரண திரைப்படமாக இருந்தால், தொடக்கம், இடைவேளை மற்றும் முடிவு என எதை எங்கே வைப்பது? என்பது தெளிவாக முடிவு செய்து விடலாம். ஆனால் இது ஒருவரின் வாழ்க்கை. அவர் இப்போது நம்மோடு இல்லை. எனவே நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருந்தது” என பகிர்ந்து கொண்டார் ஹசீஃப்.
பொதுவாக நேர்காணல்கள் தான் ஒரு ஆவணப்படத்தின் முதுகெலும்பு என்பதால், ஹசீஃபும் அவரது குழுவும் இந்த ஆவணப் படத்திற்காக சரியான மனிதர்களைக் கண்டுபிடிப்பதற்காக உண்மையிலேயே ரகுவரனை நன்கு அறிந்தவர்களை தீவிரமாக தேட வேண்டியிருந்தது.
அதிகம் யாருடனும் பழகாமல் தனிமையை விரும்பக் கூடியவராக ரகுவரன் இருந்ததால் இந்த தேடல் இன்னும் சவாலானதாக அவர்களுக்கு இருந்தது. ஆனாலும் இந்த ஆவணப் படத்தில் அவரை நன்கறிந்தவர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த நாசர், நிழல்கள் ரவி, சுரேஷ் கிருஷ்ணா, லிங்குசாமி, ரோகிணி ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.
அது மட்டுமல்லாமல் ஆச்சரியமான சிறப்பு தோற்றம் ஒன்றும் உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். ஆனால் அது குறித்து இப்போதைக்கு மிக ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். ஹசீஃப் தன்னுடைய சிறு வயதில் முதன் முதலாக வியூஹம் (1990) எனும் மலையாள படத்தில் தான் ரகுவரனை பார்த்ததாக கூறுகிறார். டோனி லூயிஸ் எனும் பயங்கரமான காவல் அதிகாரியாக ரகுவரன் நடித்திருப்பார். முதன்முறையாக ரகுவரனை பார்த்த காட்சியை ஹசீஃப் இப்படி விவரிக்கிறார்...

”பள்ளி முடிந்து நான் வீட்டுக்கு திரும்பிய போது வீட்டில் இந்த படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ரகுவரனது அறிமுகக் காட்சி இன்னும் என் மனதில் ஆழமாக உள்ளது. ரகுவரனைத் திரையில் பார்த்த கணத்தில், 'ராம்போ சில்வெஸ்டர் ஸ்டாலோன் எப்படி ஒரு மலையாள திரைப்படத்தில் வந்தார்?' என்று நான் திகைத்துப் போனேன்” என அதனை நினைவு கூறுகிறார் ஹசீஃப்.
அப்போது, தான் பார்த்த அதே நடிகரைப் பற்றி ஒரு நாள் ஆவணப்படம் எடுப்பார் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். அலப்புழாவைச் சேர்ந்த ஹசீஃப், சிறு வயது முதலே ரகுவரனின் மிகத் தீவிரமான ரசிகர்.
ரகுவரனது தோற்றம், முகத்தில் உள்ள அமைதி மற்றும் மறக்க முடியாத குரல் என முழுவதுமாக அறிந்த ரகுவரனை மையமாக கொண்ட ஆவணப்படத்தை முதல் படைப்புக்காக நேரம், பணம் ஆகியவற்றை முதலீடு செய்வதில் பெரிதும் யோசிக்கவில்லை.
இந்த ஆவணப்படத்தை உருவாக்குவதற்கு அவரை ஈர்த்த விஷயம் குறித்து கேட்ட போது, “இதற்கு குறிப்பிட்ட ஒரு விஷயமே காரணமாக இல்லை. ரகுவரனது வாழ்க்கை, அவரது பயணம், நடிப்பின் மீதான ஆர்வம், கடின உழைப்பு அவரது வெற்றி மற்றும் ஒரு கட்டத்தில் தனிமைக்குள் சென்ற அவரது முடிவு என எல்லாமே தான் காரணம்“ என்கிறார்.
”ரகுவரனின் வாழ்க்கையின் சில பகுதிகள் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன. ஆனாலும் அந்த நிகழ்வுகளின் பன்முகத்தன்மை தான் இதனை ஒரு அழகான கதையாக்குகிறது. அவர் வாழ்க்கையை திட்டமிடாமல் வாழ்ந்தவர். மேலும் தென்னிந்தியாவில் அவர் சமகால நடிகர்களை விட தனித்து நின்றவர். அவரது உயரமான தோற்றம், குரல், உடல் மொழி இவை அனைத்தும் சேர்ந்து அவர் இருந்தால் எளிதாக யாருடைய கவனத்தை ஈர்ப்பவராக இருந்தார்” என உற்சாகமாக பேசுகிறார் ஹசீஃப்.

இந்த ஆவணப்படத்திற்கென ஆய்வைத் தவிர, ஹசீஃப் தன்னுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய நடிகர் நண்பர்கள் இந்த ஆவணப்படத்தை மிகவும் நெருக்கமாக வடிவமைக்க உதவியதாகப் பகிர்கிறார். "அவர்கள் போராடுவதை, இரவு பகல் பாராமல் உழைப்பதை நான் பார்த்திருக்கிறேன். எவ்வளவு பணம், வெற்றி அல்லது புகழ் கிடைத்தாலும்... இறுதியில், அவர்கள் அனைவரும் மனிதர்கள் தான்." அவர் மேலும் கூறுகிறார், "அவர்கள் எப்போதும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தில் உள்ளனர் - தங்கள் ரசிகர்களின் அன்புக்காக, பார்வையாளர்களுக்காக, விளையாட்டில் முன்னிலையில் இருக்க. ஒரு நடிகராக இருப்பது, நான் உணர்வது, ஒரு தங்கக் கூண்டில் வாழ்வது போன்றது. புகழா? அது அவர்களை என்றென்றும் சிறைப்படுத்துகிறது. அதிலிருந்து தப்பிக்க முடியாது."
ஆவணப்படத்தின் சில கற்பனை பகுதிகளில் ரகுவரனின் பாணியையும் நடையையும் மீண்டும் உருவாக்கியதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக ஹசீஃப் கூறுகிறார். ரகுவரனின் தோற்றத்தை ஒத்திருக்கும் ஒரு நடிகரையும் தான் கண்டுபிடித்ததாக அவர் கூறுகிறார்.
”அந்த நபர் ரகுவரனின் உடையில் அவரைப் போலவே அமர்ந்திருந்தார். நாம் ஃப்ரேம் ஒன்றை சரி செய்து விட்டு அவரை பார்த்த போது அவரது முடி மட்டும் குறிப்பிட்ட முறையில் இருக்க வேண்டும் என விரும்பினேன். நானே அதனை சரி செய்தேன். மீண்டும் திரும்பி வந்து ஃப்ரேமை பார்த்த போது நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன்.
அது ஒரு அழகான காட்சி, எனக்குப் பிடித்தவற்றில் ஒன்று. உண்மையில் ரகுவரன் அங்கே அமர்ந்து, திரையைப் பார்த்துக் கொண்டிருந்தார்” என ஆவணப்படத்தை உருவாக்கும் போது தன் ரசித்து நினைவில் பதிந்த ஒரு தருணத்தைப் பற்றி உணர்ச்சிபூர்வமாகவும் உற்சாகமாகவும் பேசுகிறார். அவரே அதனை நிறுத்தி விட்டு இதை விட அதிகமாக சொல்லக்கூடாது என சிரிக்கிறார்.
ரகுவரனின் மறைந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகிவிட்டன. ’ஒரு மனிதனின் கதை’ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்தார் ரகுவரன். பின்னர் படிப்படியாக தென்னிந்தியாவின் முக்கியமான வில்லன்களில் ஒருவரானார்.
20 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரைப்பயணத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். பாட்ஷா, சிவா, அஞ்சலி, முதல்வன் போன்ற படங்களில் அவரது நடிப்பு மறக்க முடியாதவை.
ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், ரகுவரனின் கதையில் என்ன இருக்கிறது? அது இன்னும் ரசிகர்களை கவரும் என நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு ஹசீஃப், ”நீங்கள் இந்த ஆவணப்படத்தின் தலைப்பைப் பார்த்தால், இதனை புரிந்து கொள்ளலாம். ரகுவரன் என்றென்றும் மறக்க முடியாத நட்சத்திரம்.
நான் இந்த ஆவணப்படத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்போ அல்லது இப்போதிலிருந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகோ எடுத்திருந்தாலும், இதே தலைப்பை தான் பயன்படுத்தியிருப்பேன். சில மனிதர்களை காலத்தால் கட்டுப்படுத்தப்பட முடியாது. அவர்கள் காலத்தை வென்றவர்கள்.
இந்த ஆவணப்படத்தின் டீசரை இணையத்தில் பதிவேற்றுவதற்கு முன், மிகவும் கவலைப்பட்டேன். எனக்கு எல்லா விதமான சந்தேகங்களும் இருந்தன. அதனால் எனது சொந்த ஆய்விற்காகவே, நான் இந்த டீசரை வெளியிட்டேன். எந்த விளம்பரமும் இல்லாமல் திரைத்துறையில் நடக்கும் எந்த செயற்கைத்தனமும் இல்லாமல், இந்த ஆவணப்பட டீசர் பல்வேறு மக்களை சென்றடைந்துள்ளது. இதன் மூலமே நாம் ரகுவரனை புரிந்து கொள்ள முடியும்” என்கிறார் ஹசீஃப்.
டீசர் இப்போது ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஆனால் இதில் உண்மையிலேயே அவரை ஆச்சரியப்படுத்திய தரவு என்பது மில்லியன் பார்வையாளர்களில் 12% பேர் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் ரகுவரன் உயிருடன் இருந்த பிறக்காதவர்கள்.
ரகுவரன் எனும் நடிகர் இன்றைய சூழலில் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுவார்? என்பதை இந்த ஆவணப்படம் நமக்கு காட்டலாம் என்கிறார் ஹசீஃப். ஏனென்றால், "முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கருத்துகளால் அவரை பார்த்த நமது முந்தைய தலைமுறை, திறமையாளராக அவரை பார்த்த நம்முடைய தலைமுறை. இவை எதுவுமே அறியாத ஜென் Z தலைமுறையினர், இதனை ஒரு கண்டுபிடிப்பாக கூட பார்க்கலாம் என்கிறார் ஆவணப்பட இயக்குநர்.
வளர்ந்து வரும் எந்தவொரு திரைப்பட இயக்குநருக்கும், ரகுவரனின் கதை என்பது ஒரு தங்கச் சுரங்கம் போன்றது என்கிறார் ஹசீஃப். அதில் ஒரு கவர்ச்சிகரமான கதைக்கு தேவையான அனைத்து அம்சங்களும், உணர்வுகளும், திருப்பங்களும் உள்ளன, அவை எளிதாக வணிகமயமாக்கப்படலாம். அதனால் தான் அவர் இந்தத் திட்டத்தை தானே தயாரிக்க முடிவு செய்தார் என்றும் கூறுகிறார்.
”தயாரிப்பாளராக இருப்பது எனக்கு படைப்பு சுதந்திரத்தைத் தருகிறது. மேலும் ஒருவரின் வாழ்க்கையின் சில உணர்வுபூர்வமான கட்டங்களை இன்னும் இழுத்துச் சொல்ல வேண்டிய தேவையில்லை. பார்வையாளர்களை பெறுவதற்காக மிகைப்படுத்தப்படுவதை நான் எதிர்க்கிறேன். தொடக்கத்திலிருந்தே, நான் அறிந்த ஒரே விஷயம் மிகைப்படுத்தப்படாமல் உண்மையாக இருக்க வேண்டும் என்பது தான் எண்ணம்" என்கிறார் ஹசீஃப்.
மேலும் இந்த ஆவணப்படத்தில் நடிகரைப் பற்றி தங்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ளும் பலரும் இருப்பார்கள். அது மட்டுமல்லாமல் அவர் மனதில் என்ன நடந்தது. அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது என இணையாக கற்பனை பதிப்பு ஒன்றில் ரகுவரனே தனது கண்ணோட்டத்தை முன்வைப்பார். அங்கேயே என் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். மற்றதை நான் பார்வையாளர்களிடம் விட்டுவிடுகிறேன்’ என விளக்குகிறார் ஹசீஃப்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த ஆவணப்படத்தில் நீங்கள் பார்க்கப்போவது ரகுவரன் என்ற நடிகர், பிரபல வில்லன் மட்டுமல்ல. ரகுவரன் எனும் மனிதனையும் நீங்கள் காணப்போகிறீர்கள். நான் அந்த கலைஞனின் அகத்தை வெளிப்படுத்த முயல்கிறேன். அங்கே நீங்கள் ரகுவரன் எனும் ஒரு அழகான, அற்புதமான மனிதனை காணலாம்
’ரகுவரன்: எ ஸ்டார் தட் டிஃபைட் டைம்’ என்பது ரகுவரனுக்கு ஒரு அஞ்சலி. நிச்சயமாக, அவரது ரசிகர்களுக்கு இது ஒரு விருந்து. அவரை மீண்டும் திரையில் காண்பார்கள்: இளைஞனாக, நடுத்தர வயதுடைய நட்சத்திரமாக, மற்றும் அவர் மறைந்த போது இன்னும் வயதானவராக என அவரது வாழ்க்கையின் கட்டங்களை நீங்கள் காண்பீர்கள்” என நெகிழ்வுடன் பேசி முடித்தார் ஹசீஃப்.