சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா சென்னையில் நேற்று (மார்ச்.25) காலமானார். அவருக்கு வயது 48. தமிழ் திரையுலகில் நடிகர், உதவி இயக்குநர், இயக்குநர் என பல நிலைகளில் பணியாற்றியிருந்த மனோஜ், மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1970களில் அதுவரை இருந்த தமிழ் சினிமாவின் போக்கை முற்றிலும் மாற்றியமைத்தவர் இயக்குநர் பாரதிராஜா. அவரது பெரும்பாலான படங்கள் தமிழ் யதார்த்த திரைப்படங்களுக்கு இன்றளவும் இலக்கணமாக கூறப்படுகிறது. அதனாலே அவர் இயக்குநர் இமயம் என்ற பெயரும் அழைக்கப்படுகிறார். அத்தகைய இயக்குநர் இமயத்தின் மகனாக பிறந்தவர் தான் மனோஜ்.
1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி தேனியில் பிறந்த மனோஜ், சிறு வயது முதலே சினிமா வெளிச்சத்தில் வளர்ந்தவர். அதனால் இயல்பாக சினிமாவிலேயே தனது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவையும் எடுத்தார். ஆனால் அவருக்கு நடிகனாக வேண்டும் என்ற எண்ணமே இல்லை.
தந்தையைப் போல தானும் ஒரு பெரிய இயக்குநராக மாற வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. அதனால் தந்தையிடமே உதவி இயக்குநராக பணியாற்ற நினைத்தார் மனோஜ். ஆனால் பாரதிராஜா, வேறு ஒரு இயக்குநரிடம் சேர்ந்து பணியாற்றுமாறு அறிவுறுத்த, மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பம்பாய்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் மனோஜ்.
Happy birthday to my guru mani sir..❤💐💐💐💐💐❤@MadrasTalkies_ @onlynikil @offBharathiraja pic.twitter.com/cX1EWI2Qfr
— manoj k bharathi (@manojkumarb_76) June 1, 2020
தான் சினிமாவை கற்றுக்கொண்டது மணிரத்னமிடம் தான், என்றுமே அவர் தான் தனது காட்ஃபாதர் என்றும் மனோஜ் குறிப்பிட்டுள்ளார். இதன் பின் மீண்டும் பாரதிராஜாவின் திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மனோஜ், தனது இயக்குநர் ஆசையை அப்பாவிடம் கூறினார். ஆனால் பாரதிராஜா அவரை நடிகனாக மாற்ற விரும்பினார்.
பெரிய இயக்குநராக இருந்தாலும் பாரதிராஜா முதன்முதலில் நடிகனாக வேண்டும் என்ற ஆசையுடன் தான் சினிமாவிற்கு வந்தார். தன்னால் சாதிக்க முடியாததை, மகன் சாதிக்க வேண்டும் என்று விரும்பிய பாரதிராஜா, மனோஜை கதாநாயகனாக வைத்து படத்தை ஆரம்பித்தார்.
தந்தை பாரதிராஜா இயக்கத்தில் ’தாஜ்மஹால்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் மனோஜ் பாரதிராஜா. முதல் படத்திலேயே தனது மகனுக்காக மிகப்பெரிய ஜாம்பாவான்களை ஒரே குழுவின் கீழ் கொண்டு வந்து பணி புரிய வைத்தார் பாரதிராஜா. ஆர்.செல்வராஜ் கதைக்கு மணிரதனம் திரைக்கதை அமைத்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். கண்ணன், மது அம்பாட் என இரண்டு முக்கியமான ஒளிப்பதிவாளர்கள் படத்தில் பணியாற்றினர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் தாஜ்மஹால் பட பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இன்றளவும் பலரது விருப்பப்பாடலாக உள்ளன. ஆனால் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இதன் பின் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ’சமுத்திரம்’ திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரின் தம்பிகளில் ஒருவராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
#FathersDay
— manoj k bharathi (@manojkumarb_76) June 20, 2021
Happy father's day appa.i love you..❤❤❤❤❤@offBharathiraja pic.twitter.com/M8j2UP3Fws
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ரசிகர்களிடையே மனோஜை கொண்டு சேர்த்தது. இதன் பிறகு மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில் ’கடல் பூக்கள்’ படத்தில் நடிகர் முரளியுடன் இணை நாயகனாக நடித்தார். இதுவும் தோல்விப்படமாக அமைந்தது. ஆனால் பாரதிராஜா, சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்றார்.
அதனையடுத்து ’காதல் மன்னன்’, ’அமர்க்களம்’ என அப்போது வெற்றிப்படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் ’அல்லி அர்ஜுனா’ படத்தில் நடித்தார். அதன் பின் ’வருஷமெல்லாம் வசந்தம்’, ’பல்லவன்’, மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில் ’ஈர நிலம்’ ஆகிய படங்களில் நடித்தார். எந்த திரைப்படமுமே மக்களிடம் வெற்றி பெறவில்லை.
ஆனால் அவரது படங்களில் அமைந்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் தோல்வியை தழுவியதால் அது தன்னை மிகவும் பாதித்ததாக தெரிவித்திருந்தார் மனோஜ். அதனாலயே நடிப்பிலிருந்து நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த காலகட்டத்தில் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளானதாகவும், தனது மனைவி மற்றும் குழந்தைகளே தனக்குத் துணை நின்று ஆறுதல் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் பின் மீண்டும் பாரதிராஜாவின் ’பொம்மலாட்டம்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
— manoj k bharathi (@manojkumarb_76) April 10, 2020
ரஜினியின் ’எந்திரன்’ படத்தில் சிட்டி என்கிற ரோபோ ரஜினி கதாபாத்திரத்திற்கான ஸ்டாண்ட் இன் (stand-in) நடிகராகவும் பணியாற்றினார். நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு வேலைகளின் மூலம் தொடர்ந்து சினிமாவுடன் தன்னை இணைத்துக் கொண்டே இருந்துள்ளார்.
தனது இயக்குநர் ஆசையை நிறைவேற்ற அதற்கான பணிகளை மேற்கொள்ள தொடங்கினார். பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ’சிகப்பு ரோஜாக்கள்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க முயன்றார். ஆனால் அந்தப் படம் தயாரிப்பு நிலைக்குச் செல்லவில்லை.
மேலும் 3 திரைப்படங்களுக்கான கதைகளை எழுதினாலும் அவையும் திரைப்படமாகவில்லை என்பதையும் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார் மனோஜ். கடைசியாக 2023ஆம் ஆண்டு வெளியான ’மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மனோஜ்.
இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜா, சுசீந்திரன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தனது தந்தை பெரிய இயக்குநராக இருந்தாலும் அவரது உதவியை பயன்படுத்தாமல் தனியாகவே முயன்று இயக்குநரானது மிக மகிழ்ச்சி என அப்போதைய நேர்காணல் ஒன்றில் மனோஜ் கூறியிருந்தார்.
*Twitter*
— manoj k bharathi (@manojkumarb_76) September 3, 2023
A glimpse into the enchanting world of #MargazhiThingal is just around the corner. Teaser Dropping Soon✨
A @ilaiyaraaja Musical 🎶
Prod by @Dir_Susi 's #VennilaProductions
Dir by @manojkumarb_76 @offBharathiraja @shyamshelvan @maalu1815 @vanchijackson pic.twitter.com/RPS9I6IiZS
கடைசியாக 2022ஆம் ஆண்டு, முத்தையா இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்த ’விருமன்’ திரைப்படத்தில், நாயகனின் அண்ணனாக நடித்திருந்தார். இதுவே இவருக்கு நடிகராகக் கடைசி திரைப்படம். இதற்குப் பின் 2024ஆம் ஆண்டு, ’ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ்’ என்கிற வெப் சீரியஸ்ஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தன்னுடன் ’சாதுர்யன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த நந்தனாவை காதலித்து 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நடிகராக, உதவி இயக்குநராக, இயக்குநராக பல பரிமாணங்களில் அறியப்பட்ட மனோஜின் அறியாத பக்கம் ஒன்று உள்ளது. இசைத்துறையின் மீதான நாட்டமே அது.
எட்டு வயதில் பியனோ பயிற்சியும், 12 வயதில் கிடார், கர்நாடக இசை, ட்ரம்ஸ் என முறையாக இசை பயின்றவர் மனோஜ். நடிகனாக மாறுவதற்கு முன்பே 1998 ஆம் ஆண்டு ’16வது வயதினிலே’ எனும் சுயாதீன பாடல் தொகுப்பை இயற்றியுள்ளார் மனோஜ். இதில் நடிகை மீனாவை பாட வைத்திருக்கிறார். இந்த ஆல்பம் தாமதமாக 2001ஆம் ஆண்டே வெளியானது.
இந்த ஆல்பத்தில் மனோஜ் பாடியதை வைத்தே அவரது முதல் படமான தாஜ்மஹாலில் மனோஜை பாடகராக அறிமுகப்படுத்தினார் ஏ.ஆர். ரஹ்மான். தாஜ்மஹால் படத்தில் இடம்பெற்றுள்ள "ஈச்சி எலுமிச்சி" என்கிற பாடலை பாடகர்களுடன் மனோஜும் இணைந்து பாடியுள்ளார்.
அப்படி முதல் படத்திலேயே நடிகராக மட்டுமில்லாமல், இசைக் கலைஞராகவும் அறிமுகமானார் மனோஜ். இப்படி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தனது அப்பாவின் துணையின்றி அடைந்து விட வேண்டும் என பல்வேறு வேலைகளைச் செய்துள்ளார். தொடர் தோல்விகளைத் தழுவினாலும் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருந்தார் மனோஜ். அதுதான் அவரது தனித்த அடையாளமாக இன்றளவும் நம்முடன் இருக்கிறது.
#flashback
— manoj k bharathi (@manojkumarb_76) June 3, 2020
Its been 20 years now...what a trip down memory lane..My first music album...❤❤❤❤@offBharathiraja @onlynikil @kayaldevaraj @sureshkamatchi @iam_SJSuryah @vp_offl @galattadotcom @behindwoods @johnmediamanagr pic.twitter.com/Wo8slgEIdQ
இதையும் படிங்க: இயக்குநர் பாரதிராஜா வீட்டில் குவியும் பிரபலங்கள்... மனோஜ் பாரதிராஜா மறைவிற்கு தமிழ் திரையுலகம் அஞ்சலி!
சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்திருந்த மனோஜ், திடீரென மாரடைப்பால் மார்ச் 25ஆம் தேதி அன்று காலமானார். மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு தமிழக திரையுகலம் முழுவதும் அஞ்சலி செலுத்தி வருகிறது.
முதல்வர் முக ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட் அரசியல் தலைவர்களும், இசையமைப்பாளரும், பாரதிராஜாவின் நெருங்கிய நண்பருமான இளையராஜா, நடிகை குஷ்பூ, நடிகர் தியாகராஜன் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.