சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள "மனுஷி" திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என்பது குறித்து விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கைக்கு எதிராகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, 2024 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது. இதை எதிர்த்தும், நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்டும் சென்சார் செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரியும், பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சென்சார் சான்று மறுத்து உத்தரவு பிறப்பிக்கும் முன், சென்சார் போர்டு தன் தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கவில்லை எனவும், சென்சார் போர்டின் உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களை தனக்கு தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சிகளை எடிட் செய்ய தயாராக இருப்பதாகவும், படத்தை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கக் கோரிய தனது விண்ணப்பத்தின் மீது விரிவான உத்தரவை பிறப்பிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்த போது, படத்துக்கு சென்சார் சான்று வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவில், எந்த காட்சிகள் எந்த வசனங்கள் ஆட்சேபனைக்குரியவை என குறிப்பிடவில்லை என்று வெற்றிமாறன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், அரசு கொள்கைகளுக்கு அவதூறு விளைவிக்கும் வகையிலும், நாட்டின் நலனுக்கு விரோதமாகவும் உள்ள காட்சிகளை நீக்கினால், சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என குறிப்பிடாமல், நாட்டின் நலனுக்கு விரோதமான காட்சிகளை எடிட் செய்ய வேண்டும் என்றால் எப்படி? என்று சென்சார் போர்ட் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.
படத்தில் இடம் பெற்றுள்ள ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என குறிப்பிட்டு தெரிவித்தால் மட்டுமே அந்த காட்சிகளை மாற்றி அமைக்க முடியும் என குறிப்பிட்ட நீதிபதி, இந்த காட்சிகள் மற்றும் வசனங்களை மனுதாரருக்கு தெரிவிப்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார். அதே போல சென்சார் வாரிய உறுப்பினர்கள் மனுதாரர்களுடன் திரைப்படத்தை பார்த்து ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் வசனங்களை சுட்டிக் காட்டலாம் என்று யோசனை தெரிவித்த நீதிபதி, வெற்றிமாறனின் மனு மீதான விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்