பத்தனம்திட்டா: தமிழில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரவி மோகன் மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து சபரிமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கார்த்தி மற்றும் ரவி மோகன் நீண்ட காலமாகவே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு நிகழ்வுகளிலும் அவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இருவரும் இணைந்து சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு சென்றுள்ளனர். . இருவரும் மாலை அணிந்து இருமுடி கட்டி ஐயப்பன் கோயிக்கு சென்றுள்ளனர். ஐய்யப்பனை தரிசனம் செய்துள்ளனர்.
நடிகர் ரவி மோகன் இதற்கு முன் பலமுறை சபரிமலை கோயிக்கு இருமுடி கட்டி சென்றுள்ளார். இம்முறை முதன்முறையாக கார்த்தியையும் உடன் அழைத்து சென்றிருக்கிறார். இவருக்கு இதுவே முதல் முறை. நடிகர்கள் ரவி மோகனும் கார்த்தியும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோயிக்கு செல்வதற்கு முன்பாக சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிக்கு இருவரும் சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது ஊடகத்திடம் பேசிய ரவிமோகன், “பத்து ஆண்டுகள் கழித்து சோட்டானிக்கரை வந்துள்ளேன். ஆண்டுதோறும் சபரிமலைக்கு வருவேன். இப்போதும் வந்துள்ளேன்” என பேசினார்.
பின்பு அவர் படம் இயக்கவிருப்பதாக கூறப்படும் செய்திகள் குறித்த கேள்விக்கு, “நீண்ட நாட்களாக படம் இயக்குவதை பற்றி கூறிக் கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக இந்த ஆண்டு படம் இயக்குவேன். யோகிபாபு அந்த படத்தில் நடிப்பார். ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படலாம்” என திடீர் அப்டேட்டுகளை தந்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய்யின் புது டைட்டில் கார்ட், 60,000 டிக்கெட் முன்பதிவு... ரி ரீலிஸில் வெற்றி பெறுமா ‘சச்சின்’?
பின்பு ஊடகத்திடன் பேசிய கார்த்தி, “சிறு வயதில் சோட்டானிக்கரை வந்துள்ளேன். இப்போது மீண்டும் வருகிறேன். சர்தார் 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. தற்போது 'வா வாத்தியார்' படப்பிடிப்பில் இருக்கிறேன். இந்த ஆண்டு இறுதியில் கைதி 2 திரைப்படம் தொடங்கப்படும்” என்று கூறினார்.
கார்த்தி அடுத்ததாக சுந்தர்.சி, கௌதம் மேனன், மாரி செல்வராஜ் என பல இயக்குநர்களிடம் கதை கேட்டு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ரவி மோகன் அடுத்ததாக ’காராத்தே பாபு’, ’பராசக்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கார்த்தி மற்றும் ரவி மோகன் சபரிமலையில் தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.