கரூர்: விஜய்யின் ’சச்சின்’ திரைப்படம் 20 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். கடந்த 2005ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ’சச்சின்’. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியுடன் அத்திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்ததது.
இந்நிலையில் ’சச்சின்’ திரைப்படத்தின் 20 ஆண்டுகள் நிறைவையொட்டி ஏப்ரல் 18ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அந்த வகையில் ’சச்சின்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
புதிதாக வெளியாகும் படத்தைப் போல சச்சின் திரைப்படத்தின் பாடல்களையும் டிரெய்லரையும் இணையத்தில் வெளியிட்டு வந்தார் கலைப்புலி தாணு. இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் ’சச்சின்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருந்தனர். இந்நிலையில் இன்று திரையரங்குகளில் சச்சின் திரைப்படம் வெளியானதையொட்டி காலை முதலே கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.
மேலும் நடிகர் விஜய் அடுத்த ஆண்டுடன் திரைத்துறையில் இருந்து விலகுவதால் இத்திரைப்படத்தின் மறு வெளியீடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் தற்போது வெளியாகக்கூடிய புது படத்தின் ரிலீஸைப் போல கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சச்சின் திரைப்பட வெளியிட்டை கொண்டாடும் பொருட்டு கரூர் பொன்அமுதா திரையரங்கம் முன்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளரும், நடிகர் விஜய் ரசிகர் மன்ற தலைவருமான மதியழகன் தலைமையில், கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளியணை ஸ்ரீ ராகவேந்திரா பள்ளியில் பயிலும், சுமார் 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு சச்சின் திரைப்படத்தை பார்ப்பதற்கான சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தைகளுடன், பொதுமக்கள், தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கொண்டாடட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதே போன்று மதுரையில் சுமார் 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சச்சின் திரைப்படம் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை முதலிலே விஜய் ரசிகர்கள் திரையரங்கங்கள் கூடி ஆரவாரம் செய்து உற்சாகமாக நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
குறிப்பாக திரையரங்கில் உள்ள விஜயின் பதாகைகளுக்கு பாலபிஷேகம் செய்தும் கோஷங்களை எழுப்பியும், பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: “இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேசுகிறேன்”... ’தக் லைஃப்’ பட நிகழ்வில் கமல்ஹாசன் பேச்சு!
’சச்சின்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் 400க்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்படுகிறது. திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவே மற்ற மறு வெளியீட்டு படங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது. மறு வெளியீட்டு படங்களின் வரிசையில் சச்சின் குறிப்பிடத்தக்க சாதனையை செய்து வருகிறது.
ஏறக்குறைய இணையதளம் மூலம் மட்டும் 60,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலைப்புலி தாணு சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். இதன் மூலம் சச்சின் திரைப்படம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.