சென்னை: தமிழ் திரையுலகில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக திரைத் துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர்கள் சரவண சுப்பையா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சூப்பர் குட் சுப்பிரமணி, இயக்குநராகும் வாய்ப்புகள் சரி வர அமையாததால் நடிகரானார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய பெண் சிங்கம் மற்றும் அஜித்தின் சிட்டிசன் ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். 'பரியேறும் பெருமாள்', 'காலா', 'பிசாசு', 'ரஜினி முருகன்', 'ஜெய் பீம்', 'வானம் கொட்டட்டும்', ’முண்டாசுப்பட்டி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
’பரியேறும் பெருமாள்’, ’ஜெய்பீம்’ ஆகிய படங்களில் இவரது கதாபாத்திரம் நினைவில் கொள்ளும்படி அமைந்திருந்தது. இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது அண்மையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது புற்றுநோய் 4 ஆம் கட்ட நிலையை எட்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் பண உதவி வேண்டும் என கடந்த வாரத்தில் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் 4-வது கட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது உயிரை காப்பாற்றுங்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு தற்போது உருக்கமான மனு ஒன்றை அனுப்பியுள்ளார் சூப்பர்குட் சுப்பிரமணி.
அந்த மனுவில், “தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்த நான், தற்போது சென்னை மேற்கு மாம்பலம் பரோடா தெரு விரிவாக்கத்தில் வசித்து வருகிறேன். நான் கடந்த 30 வருடமாக திரைப்படத் துறையில் நடிகராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றி வந்துள்ளேன்.
மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், விஜயகாந்த், சரத்குமார், அஜித்குமார், சிவகார்த்திகேயன், தனுஷ் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். நான் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிக கடுமையான நான்காவது கட்டத்தை எட்டியுள்ளேன். அதற்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.
தற்போது வரை கலைஞர் காப்பீட்டு திட்டம் தான், என்னை காப்பாற்றி வருகிறது. கலைஞர் காப்பீடு திட்டம் இல்லை என்றால் நானும் இல்லாமல் போயிருப்பேன். தற்போது எனது கல்லீரல், நுரையீரல் மற்றும் மூளை ஆகிய உறுப்புகள் புற்றுநோயால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புற்றுநோய் பிரிவு தலைமை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது கடுமையான நிதி நெருக்கடி சூழலால் மருத்துவச் செலவு, வீட்டு வாடகை, குழந்தைகளில் கல்வி ஆகியவை கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதனால் மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறேன். ஏற்கனவே சிகிச்சைக்காவும் போராடி வருகிறேன்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடுமையாக உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் எனக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், மருத்துவ நிதி உதவியும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியும் வழங்க ஆவண செய்ய வேண்டும். மேலும் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.
இதையும் படிங்க: பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் கூட்டணியின் பிரம்மாண்ட அப்டேட்!
அதனால் எனக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி அதில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுக்க வேண்டும் எனவும், என்னுடைய குழந்தைகளின் கல்வி மேற்படிப்பிற்கான உதவிகளையும் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கிறேன். மேலும் எனது மனைவி ராதா எம்.ஏ பி.எட் வரை தமிழ் வழியில் பயின்றுள்ளார்.
இவர் எனது குடும்பத்தின் முதல் பட்டதாரி பெண் ஆவார். எனது குடும்பத்திற்கு வாழ்வாதாரம் கிடைக்கின்ற வகையில் கருணை அடிப்படையில் எனது மனைவிக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் எனவும், மேலும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடியிருப்பதற்கு ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் எனவும் தங்களை பணிவுடன் வேண்டுகிறேன்” என அந்த கோரிக்கை மனுவில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் சூப்பர்குட் சுப்பிரமணி.
முன்னதாக உதவி வேண்டி சூப்பர்குட் சுப்பிரமணி வீடியோ வெளியிட்ட போது நடிகர் கார்த்தி அவரது குழந்தைகளின் படிப்புச்செலவை ஏற்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.