சென்னை: பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமீர்கான், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு எப்போது என்றும் ’கைதி 2’ திரைப்படம் குறித்த அப்டேட்டையும் தெரிவித்துள்ளார்.
‘விக்ரம்’, ’லியோ’ படத்திற்கு பின் தமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குநராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் அறியப்படும் முன்னணி இயக்குநராக மாறியுள்ளார். தற்போது ரஜினிகாந் நடிப்பில் ‘கூலி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தில், தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, கன்னட திரை உலகில் இருந்து உபேந்திரா, மலையாளத்தில் இருந்து சௌபின் ஷாகிர், மற்றும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.
இப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகராக அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமீர்கான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து சித்தாரே ஜமீன் பார் படத்தை விளம்பரப்படுத்தும் நேர்காணல் ஒன்றில் சமீபத்தில் பேசிய அமீர்கான், “லோகேஷ் கனகராஜும் நானும் அடுத்த படத்தில் இணைகிறோம். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் தற்போது ’கைதி 2’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளில் இருக்கிறார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் இப்படத்திற்கான பணிகள் தொடங்கும். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஆக்ஷன் சூப்பர் ஹீரோ வகையான படமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் கூலி திரைப்படம் பற்றி பேசிய அமீர்கான், “’கூலி’ திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும். கண்டிப்பாக அனைவரும் ரசிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
அமீர்கான் குறிப்பிட்ட சூப்பர் ஹீரோ கதையானது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த ’இரும்பு கை மாயாவி’ திரைப்படமாக இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் பல்வேறு நேர்காணல்களில் இந்த சூப்பர் ஹீரோ கதை பற்றி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கன்னட சர்ச்சைக்கு நடுவே நடிகர் சிவ ராஜ்குமாரை கன்னட மொழியில் வாழ்த்திய கமல்ஹாசன்!
'இரும்பு கை மாயாவி' எனும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் தனது கையை இழந்து, ஒரு உலோக கை பொருத்தப்பட்டு, அதைக்கொண்டு தீய சக்திகளுடன் போராடக்கூடியது. இத்திரைப்படமும் லோகேஷ் கனகராஜின் சினிமா உலகமான LCU யூனிவர்சில் இந்த படம் இடம்பெறுமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே இருக்கிறது.
’கூலி’ படத்திற்கு பிறகு ’கைதி 2’ படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ள லோகேஷ் கனகராஜ், அதைத் தொடர்ந்து கமலுடன் விக்ரம் 2, சூர்யாவுடன் ’ரோலக்ஸ்’ என வரிசையாக படங்களை கைவசம் வைத்துள்ளார் லோகேஷ். அது மட்டுமல்லாமல் அவரது LCU யூனிவர்ஸ் கதைக்களத்தில் அமைந்த படங்களை தயாரிக்கவும் இருக்கிறார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.