ETV Bharat / education-and-career
ரம்பாவின் ஆசையை நிறைவேற்றும் கணவர்! ஏழை மக்களுக்கு உதவ புதிய திட்டம்! - Actress Ramba Husband Interview
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், கல்லூரிக் கல்வியை படிக்க முடியாத நிலையில் உள்ள மக்களின் கனவை நனவாக்கும் வகையில் SLIIT Northern University தொடங்கப்பட்டுள்ளதாக இண்டி பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

Published : October 4, 2024 at 7:57 PM IST
|Updated : October 4, 2024 at 8:06 PM IST
இலங்கையில் SLIIT Northern University தொடங்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், பல்கலைக்கழகத்தில் இடமின்றி மேல் படிப்பினை முடிக்க முடியாதவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காகவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் 'தகவல் தொழில்நுட்ப பூங்கா' உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தவும், செயற்கைக்கோள் திட்டங்களில் அவர்களைப் பங்கேற்கச் செய்யவும் வழிவகுக்கின்றன. தமிழ்நாட்டுடனான உறவுகளைக் கொண்டு, இரு நாடுகளுக்கான கல்வி, வணிக மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி திட்டங்களும் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நடிகை ரம்பாவின் கணவரும் SLIIT Northern பல்கலைக்கழகத்தின் தலைவருமான இண்டி பத்மநாபன் நமக்கு பிரத்யேகமாகப் பேட்டியளித்தார்.
இண்டி பத்மநாதனின் கருத்துக்கள்:
SLIIT Northern University தலைவர் இண்டி பத்மநாதன், 2018ஆம் ஆண்டு தனது மனைவி ரம்பா இந்திரகுமாருடன் யாழ்ப்பாணம் (மானிப்பாய்) சென்று அங்குள்ள பள்ளிகளைப் பார்வையிட்டபோது, அங்கு சிறுவர்களின் கல்வி நிலையை கவனித்து, மேலான கல்வி வழங்க வேண்டும் என முடிவு செய்ததாக கூறினார்.
"போரினால், கல்வியும் நம்பிக்கையும் இழந்தவர்களுக்கு, இதை மீண்டும் திருப்பி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் இடம் இல்லாவிட்டாலும், உயர்கல்வி கொடுப்பதற்கான முயற்சி தான் இது" என்றார்.
நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் திட்டங்கள்:
- தமிழ்நாடு-இலங்கை உறவு: காலம் காலமாக இந்தியா-இலங்கை இடையே வணிக, பொருளாதார, கல்வி உறவுகள் நிலவி வருகின்றன. அதனை உறுதிப்படுத்தும் வகையில், இரு நாடுகளின் மாணவர்களும் இணைந்து செயற்கைக்கோள், பொருளாதார, வணிக திட்டங்களில் பங்கேற்க இருக்கின்றனர்.
- வளர்ந்துவரும் தொழில்நுட்பம் மற்றும் வேலை வாய்ப்புகள்: யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு, அதை மையமாக வைத்து, இணையதள நிறுவனங்கள் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும். இதன் மூலம், யாழ்ப்பாணம் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறும்.
- கல்வி உதவித்தொகைகள்: தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் படிக்க கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படும். மேலும், தமிழ்நாட்டின் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கும் கூடுதல் உதவிகள் வழங்கப்படும்.
- இலங்கை மாணவர்களுக்கு கல்விக் கடன்: இலங்கையில் படிக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் படிப்பை தொடர்வதற்கான கல்விக் கடன்களை எளிதாகப் பெறுமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
| இதையும் படிங்க |
முன்னேற்ற பாதை:
SLIIT Northern University புதிய கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய மையமாக உருவாகவுள்ளது. 30 ஏக்கர் பரப்பளவில் 20,000 மாணவர்கள் படிக்கும் திட்டத்துடன், தொழில்நுட்ப மற்றும் வேலை வாய்ப்புகளால், இலங்கையின் வடக்கு பகுதி அடுத்த கல்வி மற்றும் தொழில்நுட்ப மையமாக மாறும்.
"இலங்கையின் தெற்கு பகுதிகளில் கல்வி நன்றாக உள்ளது. அதுபோல், வடக்கு பகுதிகளிலும் கல்வி வளர்ச்சி ஏற்படுத்தி, யாழ்ப்பாணம் புதிய கல்வி மையமாக மாறும்," என இண்டி பத்மநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

