சென்னை: தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை தேர்வு (NMMS EXAMINATION)முடிவுகள் நாளை (ஏப்ரல் 12) வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வெழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை பெறுவதற்கான தேர்வு (NMMS EXAMINATION FEB 2025) கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 345 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை இவங்க தான் திருத்தணும்! அரசு தேர்வுத்துறையின் அறிவுறுத்தல்கள்! |
இத்தேர்வு முடிவுகள் நாளை (ஏப்ரல் 12) சனிக்கிழமை மதியம் வெளியிடப்படவுள்ளது. தேர்வெழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Result என்ற தலைப்பில் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
தேர்வு முடிவை தெரிந்துக் கொள்வது எப்படி?: தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை பெறுவதற்கான தேர்வு (NMMS EXAMINATION) முடிவுகள், பிப்ரவரி 2025 என்ற பக்கத்தில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மாணவ்ர்கள் தங்களின் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும், இத்தேர்விற்கான ஊக்கத்தொகை பெறுவதற்கு தேர்வுச் செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலேயே National Means Cum Merit Scholarship Scheme Examination என்ற பக்கத்தில் வெளியிடப்படும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்