கோட்டா, ராஜஸ்தான்: நாடு முழுவதும் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. முதன்மைத் தேர்வு, பிரதான தேர்வு என இரண்டு கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படு வருகிறது. முதன்மைத் தேர்வு ஏற்கனவே முடிவுகள் வெளியாகி இருந்த நிலையில், இன்று பிரதான தேர்வு முடிவு வெளியானது. நாடு முழுவதும் 2 பெண்கள் உள்ளிட்ட 24 பேர் முழு மதிப்பெண்களை பெற்றனர்.
இந்த தேர்வில் முழு மதிப்பெண் பெற்று புதிய வரலாறு படைத்துள்ள ஒடிசா மாணவர் ஓம்பிரகாஷ் பெகெரா, தான் வெற்றி பெற்றதற்கு, தன்னுடைய பெற்றோரின் முழு அர்ப்பணிப்பே காரணம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தனது வெற்றி தொடர்பாக பேசிய அவர், "எனது 10 ஆம் வகுப்பு வரை ஐஐடி போன்ற உயர் நிறுவனங்களில் எப்படி சேர்வது? அதற்கு எந்த மாதிரியான முன் முயற்சிகளை எடுக்க வேண்டும்? என தெரியாது. இந்த தேர்வுக்காக கோட்டாவில் பயிற்சி பெற்ற போதே, தேர்வு பற்றிய நல்ல புரிதல் வந்தது.
தட்டிக் கொடுத்த ஆசிரியர்கள்:
பள்ளிகளில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்ததால், முதலில் பயிற்சி மையத்தில் நடைபெற்ற தேர்வுகளில் வேதியியல் பாடங்களில் மிக குறைவான மதிப்பெண் பெற்றேன். இதனால் தான் மனதளவில் சோர்வுற்றிருந்த நிலையில், எனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் மிகுந்த உறுதுணையாக இருந்து, எனது வெற்றிக்கு உந்து சக்தியாக இருந்து வழி நடத்தினர்.
உன்னால் முடியும் என ஊக்கப்படுத்தியதால், நான் அனைத்து பாடங்களிலும் கவனம் செலுத்தி படிக்க ஆரம்பித்தேன். இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்க ஆரம்பித்தது. தொடர்ந்து பயிற்சி மையத்தில் நடைபெற்ற அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தேன்.
இதையும் படிங்க: ஜேஇஇ தேர்வு முடிவுகள்! 24 பேர் முழு மதிப்பெண்... தமிழ்நாட்டில் யாரும் முழு மதிப்பெண் இல்லை! |
மற்ற எந்த இடங்களிலும் இல்லாத வகையில் சரியான பயிற்சி கோட்டாவில் (ராஜஸ்தான்) வழங்கப்படுவதும், மாணவர்கள் குழு உணர்வோடு வெற்றி பெற வேண்டும் என படிப்பதால் மட்டுமே பல மாணவர்கள் இங்கு அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி நிறுவனங்களில் சேர்கிறார்கள். அந்த வகையில் மாணவர்களுக்கு திறமையான பயிற்சியும், வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலும் வேறு இடங்களை காட்டிலும் இங்கு அதிகம் இருக்கிறது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

செல்போனை துறந்தேன், தேர்வில் வென்றேன்:
மேலும் அவர், "எனது வெற்றிக்கு முழு முதல் காரணம், தேவையில்லாத நேரத்தை வீணடிக்கும் வேலைகளில் ஈடுபடுவதை குறைத்துக் கொண்டது தான். குறிப்பாக செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்தேன். வகுப்பறையில் நண்பர்களுடன் தேர்வு தொடர்பான சந்தேகங்கள் பேசிக் கொள்வதால், தேவையில்லாமல் செல்போனில் பேச வேண்டிய எந்த தேவையும் ஏற்படவில்லை.
இதனால் தேர்வில் முழு கவனமும் செலுத்த முடிந்ததால், எனது வெற்றிக்கு இது பிரதான காரணங்களில் ஒன்றாக இருந்தது. தற்போது இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்றாலும், இதைத் தொடர்ந்து ஜேஇஇ (அட்வான்ஸ்) தேர்விலும் வெற்றி பெற வேண்டும் என்பதே அடுத்த இலக்கு" என்றும் அவர் கூறினார்.
தாய், தந்தையே வெற்றிக்கு காரணம்:
தேர்வில் வெற்றி பெற அடிப்படைக் காரணம் தாய், தந்தையரின் அர்ப்பணிப்பு தான் என்றும் கூறிய மாணவர் ஓம்பிரகாஷ் பெகெரா, "சோர்வான நேரங்களில் என்னை ஊக்கப்படுத்தி தேர்வுக்கு முழு அளவில் தயார்ப்படுத்தியதே அவர்கள் தான். எனது பெற்றோர் இல்லாமல் இது சாத்தியமில்லை.
அரசு பணியில் இருந்த எனது தாயார் அந்த பணியை விட்டு விட்டு, கடந்த 3 வருடங்களாக என்னுடன் இருந்து கவனித்து வந்தார். எனக்காக அனைத்தையும் விட்டு விட்டு வேறு மாநிலம் வந்து தங்கி, எனது வெற்றியை மட்டுமே பிரதானமாக அவர்கள் நினைத்ததால் மட்டுமே இந்த வெற்றியை தொட முடிந்தது" என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.