சென்னை: அரசு பல்கலைக்கழகங்கள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையும், நன்மதிப்பும் ஏற்படுத்த வேண்டும். அதற்கு சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் போன்ற செயல்பாடுகளை அதிகளவில் நடத்திட பல்கலைகழகங்கள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என அமைச்சர் கோ.வி செழியன் கூறினார். மேலும், குறிப்பிட்ட நேரத்தில் தேர்வுகளை நடத்தி, முறையே அதன் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பல்கலைக்கழகப் பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்கள் மற்றும் துணை பதிவாளர்களுக்கான பணியிடை பயிற்சியினை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம், மாநிலத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்கள் மற்றும் துணை பதிவாளர்களுக்கு நிர்வாகத் திறன் மற்றும் செயல்திறன் சார்ந்த அணுகுமுறைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த பயிற்சி வழங்குகிறது.
தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் உலகளாவிய தரவரிசையில் இடம்பெறுவதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுப்புகள் மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்கள் பொதுமக்களிடம் நம்பிக்கை மற்றும் நன்மதிப்பை பெற வேண்டும் என்பதற்கான அடிப்படை, திறமையான நிர்வாகத்தை உறுதி செய்வதின் மூலமே நடக்கும். இத்தகைய பயிற்சிகள் பல்கலைக்கழக நிர்வாகத்தையும், நிதி மேலாண்மையையும் மேலும் வலுப்படுத்தும்.
மாநில உயர்கல்வி மன்றம் ஏறக்குறைய 1,000 கல்லூரி பேராசிரியர்களுக்கு கற்பித்தல் முறை குறித்து ஏற்கனவே பயிற்சி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டின் உயர் கல்விச் சூழலை மேம்படுத்துவதில், அரசு பல்கலைக்கழகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இப்பயிற்சியில் தற்போது 65 உயர் அலுவலர்கள் பங்கேற்று உள்ளனர். சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் அதிகளவில் அரசு பல்கலைக்கழகங்களில் நடைபெற ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகளின் பங்களிப்பு மற்றும் ஆலோசனைகளைப் பெற நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும்.
சர்வதேச பல்கலைக்கழங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு மாணவர்களின் சிந்தனை உலகளவிய வெளிபடுத்தப்பட வேண்டும். பல்கலைக்கழக அளவில் ஒரு நிபுணர் குழுவை (பல்கலைக்கழகம், உயர்கல்வி, மனிவள மேம்பாடு மற்றும் நிதி துறைகள்) அமைத்து மிக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தணிக்கைத் தடைப் பத்திகளை பரிசீலித்து தீர்வு காண வேண்டும். பருவத்தேர்வுகள் நடத்தவும், தேர்வு முடிவுகள் ஒரு குறிப்பிட்ட கால அளவில் வெளியிடுவதையும் உறுதிப்படுத்திட வேண்டும். முதுநிலை படிப்பில் சேருவதற்கு ஒரு மாதிரி கால அளவினை உறுதி செய்திட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: பள்ளிகளில் நடைபெறும் கொடுமைகள் குறித்த நீதிபதி சந்துரு அறிக்கையை அமல்படுத்துக - காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கோரிக்கை! |
தொடர்ந்து பேசிய அவர் வருகிற மே 3ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஆளுநருக்கு எதிரான சட்ட போராட்டதில் பல்கலைக்கழக உரிமையை மீட்டு கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கல்லூரி முதல்வர்கள், சுயநிதி கல்லூரிகளின் கூட்டமைப்பினர், மாணவர்கள் மற்றும் ஒட்டுமொத்த கல்வியாளர்கள் சார்பாக பாராட்டு விழா நடத்திட வேண்டும் என விருப்பம் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.