சென்னை: கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. கிட்டத்தட்ட நான்கு நாட்களில் மட்டும், தங்கத்தின் விலை 2,680 ரூபாய் வரை குறைந்துள்ளது.
தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதார சூழலின் மத்தியில் உள்ள கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே அமைகிறது. ஒரு பொருளின் தேவையைப் பொருத்தே அதன் விலை அதிகரிக்கும், அதனடிப்படையில் இந்தியாவில் நாளுக்கு நாள் தங்கத்தின் தேவையானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வீட்டு நடக்கும் காதுகுத்து, திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளுக்கு மூலதனமாக தங்க நகைகளே உள்ளது. மக்கள் எதிர்காலத் தேவைக்காக முதலீடு செய்வது, பரிசுகளாக வழங்குவது உள்ளிட்டவற்றுக்கு தங்கத்துக்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.
மற்ற நாடுகள் டாலர் மதிப்பு வீழ்ச்சியில் இருக்கக் கூடிய சூழலில் இருப்பதால், டாலருக்குப் பதிலாக தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாடுமே தங்களுடைய வர்த்தகத்தை அமெரிக்க டாலரில் வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால், அந்த வழக்கத்தை மாற்ற சில நாடுகள் முயற்சி செய்வதால், தங்கத்தின் டிமாண்ட் அதிகரித்து வந்ததாகவும், தற்போது அவர்கள் முதலீட்டை நிறுத்தியுள்ளதால் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது போல என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில், தொடர்ச்சியாக தங்கம் சரிவை சந்திப்பது ஏன்? அதன் காரணம்? குறித்து சென்னையில் உள்ள தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் கோல்ட் குரு சாந்தகுமார் நமது ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திடம் தொலைப்பேசி வாயிலாக காரணத்தைத் தெரிவித்தார்.
தங்கத்தின் விலை குறையக் காரணம்?
தங்கத்தின் தேவை தற்போது மிதமானதாக இருக்கிறது. நமது நாட்டில் 8 கிராம் தங்கத்தை எப்படி 1 சவரன் என்று சொல்கிறோமோ, அதேபோல சர்வதேச சந்தையில் ட்ராய் ஹௌன்ஸ் என்று சொல்வார்கள். ஒரு ட்ராய் ஹௌன்ஸ் 3,100 டாலராக இருந்தது. ஆனால் இப்போது 3,000 டாலராகக் குறைந்துள்ளது. தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் தற்போது டாலர்கள் மீது முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதனால், தங்கத்தின் விலை 3 சதவீதம் குறைந்துள்ளது.
தற்போது பங்குச்சந்தை என்பது எந்தெந்த துறைகளில் வீழ்ச்சி அதிகமாக இருக்கிறதோ? அதனைவிட்டுவிட்டு வலிமையாக இருக்கக்கூடிய துறைக்கு கவனம் திரும்பும். அந்த வகையில், பங்குச்சந்தை வீழ்ச்சியில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் போன்றவை வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்த நேரத்தில் அமெரிக்க பங்குச்சந்தையின் நிபுணர் ஜான் மில்ஸ் என்பவர் தங்கத்தின் விலை 38 சதவீதம் குறையும் என்று கூறியிருந்தார்.
அவரின் கருத்து தங்கத்தின் மீது முதலீடு செய்தவர்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தங்கத்தின் மீது முதலீடு செய்தவர்கள் அனைவரும் டாலர்கள் மீது முதலீட்டை செய்தனர். ஆனால், ஜான் மில்ஸ் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. 38 சதவீதம் என்பது மிகப்பெரிய மாற்றம் ஆகும். அது உடனே நிகழ வாய்ப்பே இல்லை.
தங்கத்தின் விலை அந்த அளவிற்கு குறையாது. அவரது கருத்தின் எதிரொலியால் தங்கத்தின் மீது தேக்கம் ஏற்பட்டு முதலீட்டாளர்களின் கவனம் டாலரை நோக்கிச் சென்றது. இதன் காரணமாக தங்கத்தின் விலை சற்று குறைந்தும் டாலரின் மதிப்பு சற்று அதிகரித்தும் இருக்கிறது.
வாய்ப்பை பயன்படுத்தி தங்கத்தில் முதலீடு:
பொதுமக்கள் தங்கத்தின் விலை வீழ்ச்சியை நல்ல விஷயமாகப் பார்க்கிறார்கள். தங்கத்தின் விலை குறைந்திருக்கும் போதே வாங்கிக்கொள்ளலாம் என்ற நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தற்போது நகைகள் வாங்குகின்றனர். முதலீட்டாளர்களும் வரும் நாட்களில் தங்கத்தின் விலை கூடுவதற்கு முன் அதில் கவனம் செலுத்த ஆரம்பிக்கின்றனர்.
தங்கத்தின் விலை மேலும் குறையுமா?:
இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தங்கத்தின் விலை அதிகமாக குறைவதற்கு வாய்ப்பு இல்லை, அப்படியே குறைந்தாலும் 300 ரூபாய் அல்லது 400 ரூபாய் மட்டுமே குறையும். அதாவது, ஒரு சவரனுக்கு 3,000 ரூபாய் வரை குறையுமே தவிர அதிக அளவு குறையாது," எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.