வாஷிங்டன்: உலக சந்தைகளை முடக்கிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் புதிய வரிவிதிப்பு 90 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், சீனா மீதான 125% வரி தொடரும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, அமெரிக்க பங்கு சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டன. அந்நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களின் 80% மதிப்பை வைத்திருக்கும் எஸ்&பி 500 (S&P 500) குறியீடு 9.5% உயர்வுடன் காணப்பட்டது. டிரம்பின் இந்த புதிய வரிவரம்புகளின் இடைநிறுத்தம் காரணமாக, கூடுதல் வரி விதிக்கப்பட்ட பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10% வரியே தொடரும்.
டிரம்பின் வரிவிதிப்புக்கு பின் உலக நாடுகளின் சந்தை ஆட்டம் கண்டது. இதனைத் தொடர்ந்து, புதிய அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று துறை சார்ந்த நிபுணர்களால் அறிவுரை வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், சந்தை வீழ்ச்சியின் பாதையை நோக்கி நகர்ந்ததால் ஓய்வூதிய சேமிப்புக் கணக்குகளின் நிலைத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டது.

மேலும், விற்பனையில் தொய்வு, விலையேற்றம் போன்று பல காரணங்களால் மக்கள் பாதிக்கப்படுவர் என்று கணிக்கப்பட்டது. அதை கருத்தில் கொண்டே இந்த 90 நாட்கள் புதிய வரி இடைநிறுத்தம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணவீக்கத்தை குறைப்பதே தன் இலக்கு என அதிபர் தேர்தல் பரப்புரைகளில் டொனால்டு டிரம்ப் நாட்டு மக்களிடம் வாக்குறுதி கொடுத்திருந்ததை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இது குறித்து டிரம்பின் சொந்த ட்ரூத் சோசியல் (Truth Social) தளத்தில், 75 நாடுகள் புதிய வரி தொடர்பாக அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பதிவிட்டிருந்தார். மேலும், “அவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்ததால் புதிய வரிவிதிப்பு 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்களுக்கு பழைய 10 விழுக்காடு வரியே தொடரும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடன் பேசிய அதிபர், “பங்குச் சந்தை சரிவுகளால் மக்கள் அச்சமடைந்துள்ளர். எனவே, வரிகள் குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சீனா மீதான வரிவிதிப்புத் தொடரும். அவர்கள் எந்த ஒப்பந்தத்திற்கும் தயாராக இல்லை,” என்று கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க |
இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் பொருள்களுக்கு 26%, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் பொருட்களுக்கு 20% வரி, ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 24%, தென் கொரிய பொருட்களுக்கு 25% என டிரம்ப் நிர்ணயித்த வரி இருந்தது. இது வர்த்தகத்தை பெருமளவு பாதிக்கும் என உலக நாடுகள் முழங்கின. அதற்கு செவிமடுக்காமல் இருந்த டிரம்ப், இப்போது 90 நாட்களுக்கு 10% எனும் அடிப்படை வரி அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் கடத்தலை தடுக்க டிரம்ப் தனித்தனியாக உத்தரவிட்டதன் காரணமாக கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு தொடர்ந்து 25% வரை வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.