புதுடெல்லி: வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து வருகின்றன. இதே போன்று வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக நோக்கத்துக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி கியால் சிலிண்டரின் விலையை மத்திய அரசு மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகிறது.
அதன்படி தற்போது, வீட்டு உபயோகத்துக்கான எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் 50 ரூபாய் உயர்த்தப்படுவதாக மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஆனால், அண்டை நாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைவு என்றும் இந்த விலையேற்றத்துக்கு மத்திய அரசு சமாதானம் கூறியுள்ளது.
அதாவது கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி, வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டரின் விலை தலைநகர் டெல்லியில் 803 ஆக இருந்தது. பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகளுக்கு 503 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவே 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் பாகிஸ்தானில் ரூ.1080, இலங்கையில் ரூ.1218 மற்றும் நேபாளத்தில் ரூ. 1206-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 2014 ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெற்றிருந்த நுகர்வோரின் எண்ணிக்கை 14.51 கோடி. இதுவே கடந்த மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 32.94 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதே காலகட்டத்தில், நாட்டின் எல்பிஜி சிலிண்டர் விநியோகிஸ்தர்களின் எண்ணிக்கை 13,986 -இல் இருந்து 25,554 ஆக உயர்ந்துள்ளது எனவும் மத்திய அரசு பெருமிதத்துடன் கூறுகிறது.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு! சென்னையில் விலை எவ்வளவு?
சென்னையில் தற்போது வீட்டு உபயோகத்துக்கான கியாஸ் சிலிண்டரின் விலை 818.50 ரூபாயாக உள்ளது. இந்த விலையேற்றத்தை அடுத்து இனி இதன் விலை 868.50 ரூபாயாக இருக்கும் எனத் தெரிகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் மார்ச் மாதம் வரை, 10 மாதங்களாக வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டர் 818.50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இதன் விலையில் 50 ரூபாய் அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.