புதுடெல்லி: பெஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டிருப்பதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தானுக்கான இந்திய தூரக அதிகாரிகளின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்படும். பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே மாதம் 1ஆம் தேதிக்குள் இந்தியா திரும்ப வேண்டும். சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர தடை விதிக்கப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டவர் யாரும் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான வாகா - அட்டாரி எல்லைப் பகுதி உடனடியாக மூடப்படுகிறது,"என கூறினார்.
மேலும், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை விலக்கிக் கொள்வது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தவிர இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தான் ராணுவ ஆலோசகர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் அனைவரையும் திருப்பி அழைத்துக் கொள்ளும்படி பாகிஸ்தானுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: இந்தியாவின் வலிமைக்கு விடுக்கப்பட்ட சவால்!
முன்னதாக ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் தாக்குதல் நடைபெற்ற நிலையில் நாட்டின் பாதுகாப்பு குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இரண்டரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி அணில் சவுகான், முப்படைகளின் தலைவர்கள், பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் போது,தரைப்படை தளபதி, ஜம்மு-காஷ்மீரின் நிலவரம் குறித்த முழுமையான தகவல்களை எடுத்துக் கூறினார். மேலும் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளும் எந்த ஒரு ஆபத்தையும் எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்,"என்று மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.